தண்டனை காலம் முடிந்தும் மனநல பாதிப்பால் பாக். சிறையில் இருக்கும் 4 பெண்கள் உள்பட 17 இந்தியர்கள்
இஸ்லாமாபாத்: 4 பெண்கள் உள்பட 17 இந்தியர்கள் தங்களின் சிறை தண்டனை காலத்தை முடித்துவிட்டதாகவும் ஆனால் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதால் தாங்கள் செல்ல வேண்டிய இடத்தை தெரிவிக்க முடியாமல் உள்ளதாகவும் பாகிஸ்தான் இந்தியாவிடம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள சிறைகளில் இருக்கும் 4 பெண்கள் உள்பட 17 இந்தியர்கள் தங்களின் தண்டனை காலத்தை முடித்துள்ளனர். ஆனால் அவர்களின் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதால் அவர்களால் தாங்கள் எங்கு செல்ல வேண்டும் என்பதை தெரிவிக்க முடியவில்லை. இதையடுத்து இது குறித்து பாகிஸ்தான் அதிகாரிகள் இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

அவர்களின் விவரங்களை இஸ்லாமாபாத்தில் இருக்கும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் அளித்தனர். அவர்கள் அந்த விவரங்கள் பற்றும் புகைப்படங்களை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
வெளியுறவுத் துறை அமைச்சகமோ அந்த 17 பேரின் குடும்பத்தாரை கண்டுபிடிக்குமாறு கூறி அவர்களின் புகைப்படங்களை உள்துறை அமைச்சகத்திடம் அளித்துள்ளது. அந்த 17 பேரின் குடும்பத்தாரை கண்டுபிடிக்க அவர்களின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
குல்லு ஜான், அஜ்மீரா, நகாயா, ஹசீனா, சோனு சிங், சுரிந்தர் மோஹ்தோ, பிரகலாத் சிங், சில்ரோப் சலீம், பிர்ஜு, ராஜு, பிப்லா, ரூபி பால், பன்வாசி லால், ராஜு மஹவ்லி, ஷ்யாம் சுந்தர், ரமேஷ் மற்றும் ராஜு ராய் தான் அந்த 17 பேர்.
350 மீனவர்கள் உள்பட 403 இந்தியர்கள் பல்வேறு குற்றங்களுக்காக பாகிஸ்தானில் உள்ள சிறைகளில் இருப்பதாகவும் அவர்களில் பலர் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் இந்திய அரசு கடந்த ஆண்டு தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications