நெருங்கும் புனித வெள்ளி... தேவாலயத்தில் தற்கொலைப் படை தாக்குதல்... பலர் படுகாயம்.. விசாரணை தீவிரம்
ஜகார்த்தா: இந்தோனேசியாவில் உள்ள தேவாலயம் அருகே பொதுமக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தோனேசியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான மக்காசரில் அமைந்துள்ள தேவாலயத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற்றுள்ளது. புனித வெள்ளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பலர் தேவாலயத்தில் கூடியிருந்தனர்.

அப்போது மோட்டர் சைகளில் வந்த இரண்டு பேர் தேவாலயத்தின் அருகே வந்ததும் மறைத்து வைத்திருந்த குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளனர். அப்பகுதியில் சில உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அது தாக்குதலை நடத்தியவர்களின் உடல் பாகங்களா அல்லது இதில் பொதுமக்கள் யாரேனும் உயிரிழந்துள்ளனரா என்பது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை என்று போலீஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேவாலயத்தின் பாதிரியார் வில்ஹெமஸ் துலாக் கூறுகையில், மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த இருவர் தேவாலயத்தின் உள்ளே நுழைய முயன்றனர். இருப்பினும், அங்குப் பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். அந்தச் சமயத்தில் திடீரென்று அவர்கள் மறைத்து வைத்திருந்த குண்டுகளை வெடிக்கச் செய்ததாக அவர் தெரிவித்தார்.
மேலும், இதில் 14 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது. அப்பகுதியில் பதிவாகியுள்ள சிசிடிவி கேமரா வீடியோக்களின் அடிப்படையில் தற்போது விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீஸ் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்திற்கு இதுவரை எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.
இருப்பினும் இந்தத் தாக்குதலுக்குப் பின் ஜமா என்ற அன்ஷருத் தவுலா பயங்கரவாத அமைப்பு காரணமாக இருக்கலாம் என்று போலீஸ் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு கடந்த 2018ஆம் ஆண்டு இந்தோனேசிய சர்ச்சுகளில் நடத்திய தாக்குதலில் சுமார் 30 பேர் உயிரிழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications