வாத்து தாக்கியதில் மணிக்கட்டு உடைந்தது... ரூ.1.5 கோடி நஷ்டஈடு கேட்கும் அமெரிக்க பாட்டி
வாஷிங்டன்: வாத்து தாக்கியதில் கீழே விழுந்து கையில் காயம் பட்ட வயதான பெண்மணி ஒருவர், தன்னை தாக்கிய வாத்தின் உரிமையாளர் தனக்கு ஒன்றரை கோடி ரூபாய் நஷ்டஈடு தர வேண்டும் என அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகருக்கு அருகே உள்ள வாஷவ்கால் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற நர்சான சிந்தியா ருடெல் (வயது 62). இவர் கடந்த 2012ம் ஆண்டு ஒரேகான் அருகே உள்ள எஸ்டகடா பகுதியில் வாழும் தனது தாயை பார்க்க சென்றார்.
அப்போது அவரது தாயின் வீட்டருகே உள்ள வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட வாத்து ஒன்று, சிந்தியா மீது தாக்குதல் நடத்தியது. இதில் கீழே விழுந்த சிந்தியாவின் கை மணிக்கட்டு உடைந்தது. மேலும் தோள்பட்டை, கை மூட்டுப்பகுதி உள்ளிட்ட இடங்களிலும் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனால் உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டதாக வாத்தின் உரிமையாளர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் சிந்தியா. அதில், தனக்கு 2 லட்சத்து 75 ஆயிரம் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.1 கோடியே 65 லட்சம் நஷ்டஈடு கேட்டுள்ளார்.