அமெரிக்காவில் தமிழிசை விழா.. 52 தமிழ் குழந்தைகள் பாட்டு!
செயிண்ட் லூயிஸ் (யு.எஸ்): அமெரிக்காவில் தமிழர்கள் பெருவாரியாக வசித்து வரும் நகரங்களில் ஒன்றான மிசோரி மாகாண, செயிண்ட் லூயிஸ் நகரில் தமிழிசை விழா நடைபெற்றது.
இங்கு முதல் முறையாக நடைபெற்ற தமிழிசை விழாவை Midwest Music Conservatory அரங்கில் மிசெளரி தமிழ் சங்கத்தினர் மிகவும் கோலாகலமாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.
தமிழ் வாத்தியங்களின் மங்கள இசையுடன் விழா தொடங்கியது. இசைக்கு மூலம் தமிழர்களே - பொற்செழியன் வரவேற்புரை வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை (ஃபெட்னா) மற்றும் அமெரிக்கத் தமிழ் கல்விகழகத்தில் முக்கிய பணியாற்றும் பொற்செழியன் வரவேற்புரை ஆற்றினார்.
‘இன்று உலகெல்லாம் வழங்கி வரும் இசை முறைகள் எல்லாம் தமிழர் இசையினின்றும் தோன்றியவை என்று கூறப்படுகிறது.தமிழர்கள் உலகின் பல பகுதிகளிலும் பரவிச் சென்றபோது தங்கள் இசையையும் உடன்கொண்டு சென்றனர்.
இப்புவியெங்கும் வழங்கிவரும் இசை முறைகளுக்கெல்லாம் அடிப்படையாய் இசை விளங்குபவை ச,ரி,க,ம,ப,த,நி என்னும் ஏழு சுரங்களை உலகுக்குத் தந்தவர்களும் பழந்தமிழர்களே' என்றுரைத்தார். உலகின் முதல் செம்மையான இசை தமிழிசை என்றும் வரலாற்று ஆதாரங்களுடன் அவர் எடுத்துரைத்தார்.
ஐந்து வயது முதல் பதினெட்டு வயது வரை 52 பேர்
கீதா சிவசங்கர் விழாவினைத் தொகுத்து வழங்கினார். இசை ஆசிரியர்கள் மாலா கோபினாத், வித்யா ஆனந்த், சீமா கஸ்தூரி, நித்யா சாய் கணேஷ், ஆத்மனாதன், கோமதி மற்றும் விதுஸ்ரீ ராஜேஷ்வரி பட் ஆகியவர்களிடம் இசை பயிலும் மாணவர்கள் தமிழிசை விருந்து படைத்தார்கள்.
ஐந்து வயது குழந்தை முதல் மேல்நிலைப் பள்ளி மாணாக்கர் வரை 52 பேர் தமிழிசையில் பாடி பார்வையாளர்களை மெய் மறக்கச்செய்தனர். அமெரிக்க தமிழ்க் குழந்தைகள் 52 பேர் ஒரே நிகழ்ச்சியில் தமிழில் பாடியது இதுவே முதல் முறை.
அகத்தியர் முதல் ஊத்துக்காடு வேங்கடகவி வரை...
பாரதியார், பாரதிதாசன், அகத்தியர், அருணகிரிநாதர், பாபனாசம் சிவன், தண்டபானி தேசிகர், அருணாசலக் கவிராயர், பெ.தூரன், ஊத்துக்காடு வேங்கடகவி மற்றும் பல கவிஞர்களின் பாடல்களை குழந்தைகள் மிகவும் அசாத்தியமாக சங்கதி தாளங்களுடன் பாடி அனைவரையும் வியப்படைய வைத்தார்கள்.
பெரியவர்களுக்கே தெரியாத பாடல்களை குழந்தைகள் பாடியதைக் கேட்டு மிகவும் நெகிழ்ச்சியடைந்தனர். விழா இறுதியில் 19 மாணவர்கள் சேர்ந்து உலக அமைதிக்காக "சாந்தி நிலவ வேண்டும்" என்ற பாடலை பாடியது அனைவர் மனதையும் கொள்ளை கொள்ளச் செய்தது.
மிசோரி தமிழ்ச் சங்க தலைவர் பிருத்விராஜ் நன்றியுரை வழங்கினார். இனி வரும் ஆண்டுகளிலும் தமிழிசை விழாவினை தொடர்ந்து நடத்தி தமிழிசையை உலகம் முழுவதும் பரவச் செய்தல் வேண்டும் என்ற உறுதிமொழியை அனைவரும் ஏற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இசை ஆசிரியர்கள் அனைவரும் கவுரவிக்கப்பட்டார்கள்.