ஐரோப்பாவில் புகுந்துள்ள 800 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்.. தாறுமாறாக தாக்கத் தயாராவதாக பரபரப்பு
லண்டன்: சிரியா மற்றும் ஈராக்கில் படு தீவிர பயிற்சி பெற்று 800 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இங்கிலாந்து மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளுக்குத் திரும்பியுள்ளனராம். இவர்கள் எந்த நேரத்திலும் மிகப் பெரிய அளவிலான தாக்குதலை நடத்தலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்கள் முக்கியமாக இங்கிலாந்தில் மிகப் பெரிய அளவில் தாக்குதல் நடத்தலாம் என்று தகவல்கள் கூறுவதால் இங்கிலாந்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்தைக் குறி வைத்து ஐஎஸ்ஐஎஸ் தீவரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக இங்கிலாந்து பாதுகாப்புத்துறையினரும் ஒப்புக் கொண்டுள்ளனர். இதனால் பரபரப்பு கூடியுள்ளது.
உத்தரவுக்காக காத்திருப்பு
அல் கொய்தா மற்றும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் உயர் மட்டத் தலைவர்களின் உத்தரவுக்காக இந்தத் தீவிரவாதிகள் தற்போது காத்திருப்பதாக கூறப்படுகிறது. உத்தரவு வந்த அடுத்த நிமிடம் தாக்குதலில் இறங்கும் அளவுக்கு ஆயத்த நிலையில் இவர்கள் இருக்கிறார்களாம்.
300 பேர் இங்கிலாந்துக்காரர்கள்
இந்த 800 பேரில் 300 பேர் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர்கள் என்று கூறப்படுகிறது. பல்வேறு வகையான தீவிரவாதப் பயிற்சி பெற்றவர்கள் இவர்கள் என்றும் சொல்லப்படுகிறது.
கண்காணிப்பில் சிலர்
இவர்களில் சிலரை பாதுகாப்புப் படையினர் கண்காணித்து வருவதாகவும், அதேசமயம், பலர் தலைமறைவாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிகத் தீவிரமான ஆதரவாளர்கள்
இதுகுறித்து ஸ்பெயின் நாட்டு பாதுகாப்பு அமைச்சர் பிரான்சிஸ்கோ மார்ட்டினஸ் கூறுகையில் இவர்கள் அனைவருமே இளைஞர்கள். இவர்கள் படு வேகமாக தீவிரவாதத்திற்கு ஆதரவாக மாறியவர்கள். அனைவருமே மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள். மிகத் தீவிரமாக தனி இஸ்லாமியக் குடியரசை இவர்கள் ஆதரிக்கிறார்கள்.
போர்க்களத்தில் பயிற்சி
இவர்களுக்கு ஈராக் மற்றும் சிரியாவில் போர்க்களத்தில் வைத்துப் பயிற்சி தந்துள்ளனர். தனித் தனியாக தாக்குதல் நடத்தவும் இவர்களுக்குப் பயிற்சி தரப்பட்டுள்ளது.
ஆம்ஸ்டர்டாமில் சிக்கிய தீவிரவாதி
சமீபத்தில் ஆம்ஸ்டர்டாம் நகரில் அதி வேக தலிஸ் ரயிலில் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் வந்த 26 வயதான மொராக்கோ நாட்டைச் சேர்நத அயூப் அல் கஸ்ஸானி என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
பிடித்துக் கொடுத்த அமெரிக்கர்கள்
இந்த நபர் கையில் ஏ.கே. 47 துப்பாக்கியை மறைத்து வைத்தபடி ரயிலில் ஏறியபோது அதில் இருந்த 3 அமெரிக்கர்கள் (அதில் இருவர் அமெரிக்க ராணுவத்தில் இருப்பவர்கள்) அந்த நபரை அடையாளம் கண்டு மடக்கி் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இந்த ரயில் பாரீஸ் செல்லும் ரயிலாகும்.
சிரியாவில் பயிற்சி பெற்றவன்
இந்த அல் கஸ்ஸானி, கடந்த ஆண்டு வரை ஸ்பெயினில் தங்கியிருந்தான். பின்னர் பிரான்ஸுக்கு இடம் பெயர்ந்தான். அங்கிருந்து துருக்கி சென்று பின்னர் சிரியா சென்று பயிற்சி பெற்றுள்ளான்.
பாதுகாப்பு அதிகரிப்பு
800 பேர் தாக்குதல் நடத்தத் தயார் நிலையில் இருப்பதாக வந்த செய்தியைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் முழுவதும் குறிப்பாக இங்கிலாந்து முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.