திடீரென தோன்றிய 200 மீ ஆழ பள்ளம்.. பதறிப்போன மக்கள்.. காரணத்தை தேட தொடங்கிய ஆய்வாளர்கள்
சான்டியாகோ: சிலி நாட்டின் கனடிய லுண்டின் பகுதியில் திடீரென ஏற்பட்டுள்ள சுமார் 82 அடி நீளம் கொண்ட பிரமாண்ட பள்ளம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
சிலி நாட்டின் தலைநகரான சான்டியாகோவிலிருந்து வடக்கே சுமார் 665 கி.மீ தொலைவில் கனடிய லுண்டின் தாமிர சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பகுதியில் கடந்த சனிக்கிழமை சுமார் 82 அடி நீளத்திற்கு பள்ளம் ஒன்று திடீரென்று ஏற்பட்டது. இதற்கான காரணம் எதுவும் கண்டறியப்படாத நிலையில், விஞ்ஞானிகளும் ஆய்வாளர்களும் குழம்பிப்போயுள்ளனர்.

இந்த பள்ளம் சுமார் 200 மீட்டர் ஆழம் வரை உள்ளது. இந்த பள்ளத்தில் தண்ணீரை தவிர வேறெதுவும் இல்லையென்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் உள்ளே என்ன இருக்கிறது என்பது குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சுரங்கத்திற்கு அருகேயே இந்த பள்ளம் உருவானதால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும் என அச்சம் எழுந்தது. ஆனால், இதுவரை எந்த உயிரிழப்புகளும் பதிவாகவில்லை. பாதிப்புகள் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வுகள் ஒருபுறம் இருக்க மறுபுறம் இந்த பள்ளம் எப்படி ஒருவானது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள அந்நாட்டின் புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் தேசிய ஏஜென்சி இந்த பகுதிக்கு சிறப்பு பணியாளர்களை அனுப்பி வைத்துள்ளது.
இந்த நடவடிக்கை குறித்து ஏஜென்சியின் இயக்குநர் டேவிட் மாண்டினீக்ரோ கூறுகையில், "இந்த பள்ளம் 200 மீட்டர் ஆழத்திலும், 82 அடி நீளத்திலும் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்திற்குள் எந்த பொருளையும் எங்களால் கண்டறிய முடியவில்லை ஆனால் இதில் நிறைய தண்ணீர் இருப்பதை மட்டும் நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். இந்த பள்ளம் ஏற்பட்ட இடத்திற்கு சுமார் 600 மீட்டர் தொலைவில்தான் குடியிருப்பு ஒன்று உள்ளது. இதர குடியிருப்பு பகுதிகள் ஏறத்தாழ ஒரு கி.மீ தொலைவில் உள்ளதால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை." என்று குறிப்பிட்டிருந்தார்.
சுரங்கத் தொழில்கள் மேற்கொள்ளப்படுவதால் இந்த பள்ளம் ஏற்பட்டுள்ளதா? அல்லது, இயற்கையிலே இந்த பள்ளம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வுகள் நீடித்து வருகின்றன.












Click it and Unblock the Notifications