ஆப்கானிஸ்தான் புதிய அரசு: உரிமை கோரி பெண்கள் போராட்டம்... தாலிபான்கள் அறிவிப்பு இன்று வெளியாகிறது
இன்றைய தினம் மதிய தொழுகைக்கு பின்னர் புதிய அரசு குறித்த அறிவிப்பை அவர்கள் வெளியிடக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
காபூல்: ஆப்கானிஸ்தானில் அமையவுள்ள புதிய அரசு தொடர்பான அறிவிப்பை தாலிபான்கள் இன்று வெளியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தாலிபான் அரசுப் போல் இது இருக்காது என்றும் சில மாற்றங்கள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அரசின் கீழ் பணியாற்ற உரிமை கோரி நேற்றைய தினம் 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஹெராத் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Recommended Video
ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக இருந்த அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறியுள்ளதை தொடர்ந்து புதிய அரசை அமைக்கும் முயற்சியில் தாலிபான்கள் ஈடுபட்டுள்ளனர். ஆப்கனின் உச்சபட்ச தலைவராக ஹெய்பத்துல்லாஹ் அகுன்ஜதா நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஆப்கானிஸ்தானில் பெண்கள் வழக்கம்போல் வேலைக்கு செல்லலாம் என்றும் அதேவேளையில், புதிய அரசில் பெண்களுக்கு இடம் இருக்காது என்றும் முக்கிய பதவிகளில் அவர்கள் அமர்த்தப்பட மாட்டார்கள் என்றும் தாலிபான் மூத்த தலைவர் ஷேர் முகமது அப்பாஸ் கூறியிருந்தார். இதையடுத்து, புதிய அரசின் கீழ் பணியாற்ற உரிமை கோரி நேற்றைய தினம் 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஹெராத் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இஸ்லாமியத்தை மையமாக கொண்டு புதிய அரசு இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் நாட்டில் இருப்பதுபோன்று ஆப்கானிஸ்தானிலும் அரசு அமைக்க உள்ளதாக தாலிபான்கள் தெரிவித்துள்ளனர். அதாவது, நாட்டின் உச்சபட்ச தலைவர் நியமிக்கப்பட்டு, அவர் அரசியல் மற்றும் மதரீதியான விவகாரங்களுக்கு தலைவராக செயல்படுவார். அவருக்கு கீழ், அதிபர் அல்லது பிரதமர் நியமிக்கப்படுவார். இந்நிலையில், உச்சபட்ச தலைவர் பதவி, தாலிபான் அமைப்பின் மூத்த தலைவர் ஹெய்பத்துல்லாஹ் அகுன்ஜதாவுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017ல் ஹெல்மாண்ட் மாகாணத்தில் ராணுவ தளத்தின் மீது தாலிபான்கள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். தற்கொலை படை தாக்குதலை முன்னின்று நடத்தியது அகுன்ஜதாவின் மகனான 23 வயது அப்துர் ரஹ்மான். இந்த தாக்குதலில் அப்துர் ரஹ்மான் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவமே தாலிபான்கள் மத்தியில் அகுன்ஜதாவின் செல்வாக்கை பல மடங்கு உயர்த்தியது.
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பின்னர், அரசு அமைப்பது தொடர்பான ஆலோசனைகளில் அகுன்ஜதா பங்கேற்றாலும் அவர் தொடர்பான காட்சிகளே, புகைப்படங்களே வெளியிடப்படவில்லை. தாலிபான் அமைப்பின் நிறுவனர் முல்லா ஓமர் போன்றே, அகுன்ஜதாவும் யாரும் அறியப்படாதவர். இதுவரை அகுன்ஜதாவின் ஒரே ஒரு புகைப்படத்தை மட்டுமே தாலிபான்கள் வெளியிட்டுள்ளனர். தாலிபான்களின் அரசியல் பிரிவு தலைவர் முல்லா பராதர் வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்கலாம் என்றும் கூறப்படுகின்றது.
ஆப்கானிஸ்தானில் அமைய உள்ள புதிய அரசு அனைவருக்குமான அரசாக புதிய அரசு இருக்கும் என தாலிபான்கள் கூறியிருந்தனர். ஆட்சி அமைப்பதின் இறுதிக் கட்டத்தில் இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். இன்றைய தினம் மதிய தொழுகைக்கு பின்னர் புதிய அரசு குறித்த அறிவிப்பை அவர்கள் வெளியிடக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. போர்கள் காரணமாக வலுவிழந்துள்ள பொருளாதாரத்தை வலுபடுத்தும் விதமாக புதிய அரசு அமையுமா என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications