370வது பிரிவு ரத்துக்கு பிறகே இதை நான் உணர்ந்தேன்.. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பேச்சு
நியூயார்க்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர் தான் தெரிந்தது. இந்திய அரசு ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரல்களை பின்பற்றுகிறது என்பதை நான் உணர்ந்தேன் என பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கில் வெளிநாட்டு உறவுகள் கவுன்சிலின் தலைவர் ரிச்சர்ட் என். ஹாஸ் உடன் உரையாடிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் காஷ்மீர் விவகாரம் குறித்து பல்வேறு விஷயங்களை பேசினார்.
அப்போது இம்ரான்கான் பேசுகையில், "ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர் தான் தெரிந்தது. இந்திய அரசு ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரல்களை பின்பற்றுகிறது என்பதை நான் உணர்ந்தேன்.
பிரச்சனை என்னவென்றால் காஷ்மீர் பிரச்சனையில் வேறு யாரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட முயற்சிக்கும் போதெல்லாம் இரு தரப்பு பிரச்சனை என்று இந்தியா கூறுகிறது. ஆனால் இந்தியா எங்களுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதில்லை. நான் ஐநா சபையில் இந்த பிரச்சனையை பேசுவேன். ஐநா இதில் தலையிடும்.
இன்றைய இந்தியா.. காந்தி மற்றும் நேருவின் இந்தியா அல்ல.. இம்ரான் கான் பரபரப்பு பேச்சு
சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பின்னர் காஷ்மீரிகள் தங்கள் வீடுகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இப்போது நான் இந்தியாவுடன் எப்படி பேசுவேன்? சர்வதேச சமூகம் காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவை தளர்த்த வைக்கும் என நான் எதிர்பார்க்கிறேன்.
சிறுபான்மையினர் மற்றும் பெண்களை பாகிஸ்தான் அரசு பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறது. இங்கு சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் நடைமுறைப்படுத்துவதில் தான் பிரச்சனை. பெண்களுக்கு உதவவும், சீக்கிய மற்றும் இந்து ஆலயங்களை மீட்டெடுக்கவும் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.. எனது பாகிஸ்தானுக்கான பார்வை என்பது பெண்களுக்கு மற்றும் சிறுபான்மையினருக்கு சம உரிமை உண்டு" இவ்வாறு கூறினார்.