கலர் மாறுது உலக அதிசயமான தாஜ்மஹால்– காரணம் காற்று மாசு!
வாஷிங்டன்: இந்தியாவில் அமைந்துள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் மாறிவரும் காலநிலைகளால் நிறமிழந்து வருவதாக ஆய்வாளர்கள் "திடுக்" தகவலை வெளியிட்டுள்ளனர்.
உலகின் 7 அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது.
இதை பார்க்க உலகம் முழுவதும் இருந்து வருடந்தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு வருகிறார்கள்.
பளிங்கினால் ஒரு மாளிகை:
இந்த மாளிகை முழுவதும் மார்பிள் எனப்படும் தூய வெள்ளை நிற பளிங்கு கற்களால் கட்டப்பட்டுள்ளது.
மும்தாஜுக்கு சமர்ப்பணம்:
1600 ஆம் ஆண்டுகளில் மொகலாய மன்னன் ஷாஜகான் தனது மனைவி மும்தாஜின் நினைவாக கட்டிய இந்த மாளிகையின் மேல்புறம் 115 அடி உயர பளிங்கு கற்களால் ஆன கூம்பு உள்ளது. அதுமட்டுமின்றி 130 அடி உயர ஸ்தூபிகளும் சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ளது.
உலக பாரம்பரிய சின்னம்:
1983 ஆம் ஆண்டு யுனெஸ்கோ தாஜ்மகாலை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது. 1970 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் தாஜ்மகாலின் தூய வெண்மை நிறம் பழுப்பு நிறமாக மாறுவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.
பளிங்கு கற்கள் பாதுகாப்பு:
இதனால் தாஜ்மகாலை சுத்தம் செய்வது, மாளிகையின் மீது படிந்திருக்கும் தூசி மற்றும் மண்ணை அகற்றுவது, வெள்ளை நிற களிமண் பூசுவது மற்றும் அகற்றுவது ஆகிய பணிகளை தொடர்ந்து செய்து அந்த பளிங்கு கற்களை பாதுகாத்து வந்தனர்.
காற்றில் பரவும் மாசு
காற்றில் உள்ள மாசு தான் இந்த நிறம் மாறுவதற்கு காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டாலும், இதற்கு சரியான ஆய்வுகள் செய்யப்படாமல் இருந்தது.
ஆய்வுகளின் முடிவு:
இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஜார்ஜியா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், கான்பூர் ஐ.ஐ.டி, இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம், விஸ்கான்சின் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து தாஜ்மகால் நிறம் மாறுவதற்கான காரணம் என்ன என்ற ஆய்வை மேற்கொண்டன.
கரித்துகள்களால் நிற மாற்றம்:
இயற்கை எரிபொருட்களில் இருந்தும், சமையல் மற்றும் செங்கல் சூளைகள், குப்பைகள் மற்றும் பழைய பொருட்களை எரித்தல், வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை போன்ற பலவிதங்களில் உருவாகின்ற கரித்துகள்களால் இந்த நிறம் மாறுதல் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.
வாகன் போக்குவரத்தும் காரணம்:
இது சுற்று வட்டார விவசாய நடவடிக்கைகளில் இருந்தும், வாகன போக்குவரத்தில் இருந்தும் அல்லது தொலைதூரங்களில் இருந்தும் கூட வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.