எப்படி இருந்த அமெரிக்கா இப்படி ஆய்ருச்சு.. மோடிக்கு வலிந்து வலிந்து அழைப்பு
வாஷிங்டன்: மோடியை முறைத்துக் கொண்டது, விசா கொடுக்க மறுத்தது எல்லாம் பழங்கதையாகி விட்டது. இப்போது மோடிக்கு வலிந்து வலிந்து வந்து அழைப்பு விட்டபடி இருக்கிறது அமெரிக்கா. மோடியோ அமெரிக்காவை பெரிதாக கண்டு கொள்ளாமல் திராட்டில் விட ஆரம்பித்திருக்கிறார்.
மோடி காலத்தில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் பெரிய அளவுக்கு அமெரிக்காவுக்கு முக்கியத்துவம் தரப்பட மாட்டாது என்பது தெளிவாகி வருகிறது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவின் எடுப்பார் கைப்பிள்ளை ரேஞ்சுக்குத்தான் இந்தியா இருந்தது. ஆனால் இப்போது அமெரிக்காவை சற்று தூர வைக்கும் முடிவில் மோடி தரப்பு இருப்பதாகவே தெரிகிறது.
மாறாக, இதுகாலம் வரை இந்தியாவுடன் நெருக்கமாக இருந்து, அமெரிக்காவின் இறுக்கமான உறவால் சற்று விலகிப் போய் விட்ட நாடுகளுடன் நட்பைப் புதுப்பிக்கவும், இறுக்கமாக்கவும் மோடி ஆர்வம் காட்டுவதாகவும் தெரிகிறது.
இதை உணர்ந்துதான் ஒன்றுக்கு இரண்டு முறை அதிபர் ஒபாமாவே மோடியைத் தொடர்ந்து தொடர்பு கொண்டு அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
ஒபாமா -கெர்ரி
ஒபாமாவும் சரி, வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரியும் சரி, புதிய இந்திய அரசுடன் இணக்கமான நட்புறவை பேணிக் காக்க ஆர்வமாக உள்ளனர். இதற்காக மோடியை தொடர்ந்து 2க்கும் மேற்பட்ட முறை இருவரும் தொடர்பு கொணடு பேசியுள்ளனர்.
கண்டுக்காத மோடி
ஆனால் தனக்கு வாழ்த்து தெரிவித்த ரஷ்ய அதிபர், ஜப்பான் பிரதமர், வங்கதேச பிரதமருக்கெல்லாம் நன்றி சொல்லிய பிறகுதான் லேட்டாகத்தான் அமெரிக்காவின் வாழ்த்துக்கே நன்றி கூறி கடுப்படித்தார்.
மீசையில் மண் ஒட்டாத அமெரிக்கா
மோடி இப்படி கடுப்படித்தாலும் கூட இந்தியாவைக் கண்டு கொள்ளாமல் இருக்க அமெரிக்காவால் முடியாதே.. காரணம், கோடானு கோடி டாலர்களில் இந்தியாவில் அமெரிக்காவின் ஏகப்பட்ட பிசினஸ் இருக்கிறதே.. அதெல்லாம் ஸ்டாப் ஆகி விட்டால் என்னாவது.. எனவே கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத குறையாக மோடி அமெரிக்கா வர வேண்டும் என்று அடுத்தடுத்து அழைப்பு விடுத்து வருகிறது.
மோடி ஆதரவை எதிர்பார்க்கவில்லை
மோடிக்கும், பாஜகவுக்கும் மக்கள் மத்தியில் இப்படி ஒரு பெரிய ஆதரவு கிடைக்கும் என்பதை அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை. இதனால்தான் இப்போது வேறு வழியில்லாமல் இறங்கி வந்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்காவின், தென் மத்திய ஆசியாவுக்கான உதவி அமைச்சர் நிஷா தேசாய் பிஸ்வால் கூறுகையில், இந்திய மக்களின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். மோடி பிரதமராவதை வரவேற்கிறோம். அவருடன் இணைந்து செயல்பட ஆர்வமாக உள்ளோம் என்று கூறியுள்ளார்.
மோடியை வரவேற்க ஒபாமா ஆர்வம்
மேலும் அவர் கூறுகையில், மோடியை அமெரிக்காவுக்கு வரவேற்க அதிபர் ஒபாமா ஆர்வமாக உள்ளார். உலகின் பிற நாடுகளைப் போலவே அமெரிக்காவும், இந்தியாவில் நடந்த மாற்றத்தை வரவேற்கிறது என்றார்.
இந்தியாவில் மட்டுமல்ல.. அமெரிக்காவிலும் கூட அரசாங்க அளவில் மோடியால் பலரது மனநிலை மாறி விட்டதையே இது காட்டுகிறது.