மலேசிய விமானத்தை தகர்த்தது கொடூரமான 'பக்' ஏவுகணை!
கோலாலம்பூர்: மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியது பக் என்ற ஏவுகணை என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த ஏவுகணையை தயாரித்தது ரஷ்யா என்பதும் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் பென்டகன் செய்தித்தொடர்பாளர் ரியர் அட்மிரல் ஜோன் கிர்பை கூறுகையில், அமெரிக்காவுக்கு இதுவரை என்ன நடந்தது என்ற முழு விவரம் தெரியவில்லை. நேட்டோ நாட்டு படைகளின் விமானங்கள் வான் எல்லையில் பறந்து தாக்குதல் எப்படி நடந்தது என்பதை கண்காணித்து வருகின்றன என்றார்.
ரஷ்ய ஆதரவாளர்கள்
லண்டனின் ராயல் ஐக்கிய சேவை இன்ஸ்ட்டிடியூட்டை சேர்ந்த இகோர் சுடியாஜின் கூறுகையில், ரஷ்யா அல்லது ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள்தான் இந்த தாக்குதலை நடத்தியிருக்க வேண்டும். கடந்த வாரம் இதுபோல உக்ரைன் விமானத்தை இவர்கள்தான் சுட்டு வீழ்த்தியிருந்தார்கள் என்றார்.
மிகவும் கொடூரமான ஏவுகணை
நேட்டோ படைகளால் மிகவும் கொடூரமானதாக வர்ணிக்கப்படுவதுதான் இந்த பக் ஏவுகணை. 1970ம் ஆண்டுகளில் ஒருங்கிணைந்த சோவியத் ரஷ்யாவால் இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டது. இதன்பிறகு பல வகைகளிலும் இந்த ஏவுகணை உருமாற்றப்பட்டது, மதிப்பு கூட்டப்பட்டது. பல நாடுகளுக்கும் இந்த வகை ஏவுகணையை ரஷ்யா ஏற்றுமதி செய்துள்ளது. உக்ரைன் பிரிவினைவாதிகளிடமும் இந்த ஏவுகணை உள்ளதாம்.
பட்டனை அழுத்தினால் பாயாது
ராயல் யுனைட்டட் இன்ஸ்ட்டிடியூட்டின் இயக்குநர் ஜோனாதன் இயல் கூறுகையில், உக்ரைன் கிளர்ச்சியாளர்களிடம் இந்த ஏவுகணை இருந்தாலும்கூட, அதை பயன்படுத்த போதிய நிபுணத்துவமோ, சக கருவிகளின் உதவிகளோ அவர்களுக்கு கிடையாது. ஒரு பட்டனை அழுத்தினால் முடிந்துபோகும் விஷயம் இது கிடையாது.
கிளர்ச்சியாளர்களால் முடியாது
ரேடாரை எப்படி பயன்படுத்த வேண்டும், இலக்கை எப்படி நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட பல திறமைகள் இதற்கு தேவை. சாதாரண கிளர்ச்சியாளர்களால் இதை செய்திருக்க முடியாது என்றார். விமானம் சுடப்பட்டது உண்மையாக இருந்தால் அது ஏதாவது ஒரு நாட்டு படைகளால் மட்டுமே முடியும். கிளர்ச்சியாளர்களால் அதை செய்ய முடியாது என்றார்.
|
ரஷ்ய விமானம் இலக்கு
இதே பக் வகை ஏவுகணை, ஜார்ஜியா மற்றும் ரஷ்யா நடுவேயான சண்டையின்போது இரு தரப்பில் இருந்தும் பயன்படுத்தப்பட்டது. அப்போது ரஷ்ய விமானத்தை ஜார்ஜியா சுட்டு வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. பக் ஏவுகணை 60 முதல் 90 சதவீதம் இலக்கை சரியாக குறிவைத்து தாக்கும் வல்லமைமிக்கது.
ரேடார் உதவி தேவை
சர்வதேச நாடுகள் பயன்படுத்தும் ஏவுகணைகளில் மிகவும் சக்திவாய்ந்தது இந்த பக் வகை ஏவுகணையாகும். ரேடார் உதவி கொண்டே இந்த ஏவுகணையால் தாக்க முடியும். இதை ஒரே நபரால் செயல்படுத்திவிட முடியாது. துப்பாக்கி சுடுவதை போல காலையில் குறிவைத்து மாலையில் சரியாக சுட்டுவிட முடியாது. இதற்காக சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இலக்கை சரியாக தாக்குவதற்கு சரியான பயிற்சி தேவை.