ஈழத்தில் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் பாதுகாப்பு இல்லை: ஐ.நா. சபையில் அனந்தி புகார்

Subscribe to Oneindia Tamil

Ananthi addresses UNHRC in Geneva on continued genocide against Tamils
ஜெனீவா: இலங்கையில் தமிழர் வாழும் பகுதியில் பகுதியில் இன அழிப்பு என்பது தொடர் கதையாக இருந்து வருகிறது என்று ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதியும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி எழிலனின் (சசிதரன்) மனைவியுமான அனந்தி சசிதரன் குற்றம்சாட்டியுள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத்தில் அனந்தி சசிதரன் பேசியதாவது:

இலங்கைத்தீவின் வட மாகாண சபையில் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதியாக இன்று நான் இங்கு நிற்கிறேன். பெரு மதிப்புக்குரிய இந்தப் பேரவையானது இலங்கை அரசின் பெருங்குற்றங்கள் குறித்து கவனம் செலுத்துவதை நாங்கள் வரவேற்கிறோம்.

போரின் முடிவில் எனது கணவர் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்ததை நேரடியாக பார்த்த சாட்சியமாக காணாமல் போனவர்களைத் தேடிக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கானவர்களில் ஒருத்தியாக நான் இங்கு நிற்கிறேன்.

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்ததில் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை ஐ.நா மன்றமும் அறிவித்திருக்கிறது. இன அழிப்புப் போரின் பின்னரும் 1,46,000க்கும் அதிகமானோர் நிலை என்ன என்பது தெரியவில்லை.

யுத்தத்தின் பின்னரும் தமிழ் இன அழிப்பு வேறு வடிவங்களில் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. இலங்கை ராணுவம் எமது தாயகத்தை ஆக்கிரமித்திருக்கிறது. எமது நிலங்கள் மீது எமக்கே உரிமை இல்லாத நிலை காணப்படுகிறது. எமது மண் எம்மிடமிருந்து இலங்கை ராணுவத்தாலும் சிங்களவர்களாலும் பறிக்கப்படுகிறது.

ராணுவ ஆக்கிரமிப்பினால் எமது பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் பாதுகாப்பு இல்லை. பல இந்துக் கோயில்களும், தேவாலயங்களும் அழிக்கப்பட்டு அங்கு புத்தர் சிலைகள் நிறுவப்படுகின்றன. எமது பண்பாடு நாளாந்தம் சீரழிக்கப்படுகிறது. சிங்கள அரசு எமது மண்ணையும், பண்பாட்டையும், வரலாற்றையும், ஏன் எமது மனப் பதிவுகளையும் கூட அழித்துவிட முனைகிறது.

ஆனால் ஐ.நா சபை இதைத் தடுத்து நிறுத்த எதுவும் செய்யவில்லை. இன அழிப்பு நடைபெறுகிறது என்பதை அங்கீகரிக்கவும் இல்லை. தாயகத்தில் இருக்கும் தமிழர்களுக்கு குரல் கொடுக்கவல்ல ஒருத்தியாக நான் இதைச் சொல்கிறேன். இங்கு கொண்டுவரப்பட்டிருக்கும் தீர்மானங்கள், தற்போது முன்வைக்கப்படவிருக்கும் நகல் உட்பட, பலனளிக்காமல் இருப்பது குறித்து எமது மக்கள் கடும் அதிருப்தி கொண்டிருக்கிறார்கள். நாங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை இவை தீர்க்கவில்லை.

இலங்கை அரசு தன்னை மாற்றிக்கொள்ளும் தகைமை அற்றது. அது ஒரு இன அழிப்பு அரசு. அது தன்னைத் தானே விசாரிக்கும் ஆற்றல் அற்றது. எனவே இன அழிப்பு மீதான ஒரு சுயாதீனமான, சர்வதேச விசாரணை ஐக்கிய நாடுகள் சபையால் முன்னெடுக்கப்படவேண்டும்.

மிகவும் கொடூரமான அரச ஒடுக்குமுறைக்கு 60 ஆண்டுக்கும் மேலாக உட்படுத்தப்பட்டவர்கள் என்ற வகையில் தமிழ்த் தேசத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டிய கடமைப்பாடு இந்த உலகின் கைகளிலேயே உள்ளது.

இவ்வாறு எழிலனின் மனைவி அனந்தி சசிதரன் உரையாற்றினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+