விசாரணைக் குழுக்களுக்கு அனுமதி தர மறுக்கும் புரட்சிப் படை.. ரஷ்யாவுக்கு உலகத் தலைவர்கள் எச்சரிக்கை!
கிரபோவ், உக்ரைன்: மலேசிய விமானம் தாக்கி வீ்ழ்த்தப்பட்ட இடத்திற்கு விசாரணையாளர்களை முழுமையாக அனுமதிக்க ரஷ்ய ஆதரவு புரட்சிப் படையினர் மறுத்து வருவதால், ரஷ்யாவை பல்வேறு உலக நாடுகளும் கண்டித்துள்ளன.
புரட்சிப் படையினர் தங்களது நிலையை மாற்றிக் கொள்ளுமாறு ரஷ்யா அவர்களைக் கண்டிக்க வேண்டும் என்று கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.
சம்பவம் நடத்திலில் விமான சிதறல்கள், உடல்கள், உடமைகள் இன்னும் முழுமையாக அகற்றப்படவில்லை. மீட்புப் பணிகளும் முறையாக நடப்பது போலத் தெரியவில்லை. இந்த நிலையில் அந்த இடத்திற்கு சர்வதேச விசாரணைக் குழுக்களை அனுப்ப புரட்சிப் படையினர் அனுமதிக்காமல் உள்ளனர். இது பல்வேறு உலக நாடுகளை எரிச்சல்படுத்தியுள்ளது. ரஷ்யா இந்த விஷயத்தில் மெத்தனம் காட்டுவதாகவும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

ஆதாரங்கள் அழிகின்றன
சம்பவம் நடத்தில் தற்போது ஆதாரங்கள் அழிக்கப்பட்டு வருவதாக உக்ரைன் ஏற்கனவே குற்றம் சாட்டியுள்ளது. ஆதாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அமெரிக்காவும் ஏற்கனவே கூறியுள்ளது.

கவலை தருகிறது
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லவ்ரோவுடன் தொடர்பு கொண்டு நிலைமை கவலை தருவதாக உள்ளது. விசாரணைக் குழுக்களுக்கு அனுமதி தர மறுப்பது துரதிர்ஷ்டசமானது. புரட்சிப் படையினரை ரஷ்யா கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அலட்சிய மனோபாவம்
கெர்ரியின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறுகையில், சம்பவம் நடந்த இடத்தில் ஆதராங்கள் அழிக்கப்படுவதாக கூறப்படுவது கவலை தருவதாக உள்ளதாக கெர்ரி தெரிவித்தார். மேலும், உடல்களை மரியாதைக்குரிய வகையில் அகற்றாமல் அவமரியாதை செய்ததாகவும் தகவல்கள் வருவது வருத்தம் தருகிறது என்றும் கெர்ரி, ரஷ்ய அமைச்சரிடம் தெரிவித்தார் என்றார்.

இங்கிலாந்து, மலேசியா, ஆஸ்திரேலியாவும் அதிருப்தி
இதேபோல மலேசியா, இங்கிலாந்து, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளும் ரஷ்ய ஆதரவுப் படையினரின் செயல் குறித்து அதிர்ச்சியும், அதிருப்தியும், கண்டனமும் வெளியிட்டுள்ளன.

புடின் தலையிட வேண்டும்
உடனடியாக ரஷ்ய அதிபர் புடின் இதில் தலையிட்டு ரஷ்ய ஆதரவு புரட்சிப் படையினர், விசாரணைக் குழுக்களை அனுமதிக்க உத்தரவிட வேண்டும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ரஷ்யாவுக்கு எதிராக தடை - இங்கிலாந்து வலியுறுத்தல்
இதற்கிடையே, இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூன், ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் புடின் வழிக்கு வராவிட்டால் ஐரோப்பிய யூனியன் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரஷ்யாவுக்கு எதிரான சர்வதேச நாடுகளின் அணுகுமுறையை மாற்ற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications