சிங்கப்பூரைத் தொடர்ந்து... இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் மேகிக்கு ஆஸ்திரேலியாவும் தடை!
மெல்போர்ன்: இந்தியாவில் இருந்து மேகி நூடுல்ஸ் இறக்குமதியை ஆஸ்திரேலிய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைக்க இன்று உத்தரவிட்டுள்ளது. மேகி பற்றி இந்தியாவில் நிலவும் சர்ச்சைகளால் ஆஸ்திரேலியா இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது.
ஜூன் 11ம் தேதியிட்டு, ஆஸ்திரேலிய விவசாயத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், "இந்தியாவில் இருந்து வரும் மேகி நூடுல்ஸ்களை அப்படியே நிறுத்தி வைக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உணவு தர கட்டுப்பாட்டு அளவைவிட உப்பு மூலப்பொருள் மேகியில் அதிகம் உள்ளது என்றும் அந்த உத்தரவு சுட்டிக்காட்டுகிறது.
ஏற்கனவே சிங்கப்பூர் அரசாங்கம், இந்தியாவில் உற்பத்தியாகும் மேகி விற்பனைக்கு தடை விதித்தது. ஆனால், அந்த நாட்டு அரசாங்கம் நடத்திய ஆய்வு முடிவில், மேகியில் கேடு விளைவிக்கும் மூலப்பொருள் இல்லை என்று கூறி, தடையை இரு நாட்களில் விலக்கிவிட்டது.
இந்தியாவில் மேகிக்கு விதித்த தடை காரணமாக, நெஸ்லே நிறுவனத்துக்கு ஏற்கனவே ரூ.320 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ஆஸ்திரேலியாவுக்கு சிறிய அளவில்தான் இந்தியாவில் இருந்து மேகி ஏற்றுமதியாவது குறிப்பிடத்தக்கது.