வரலாற்று சிறப்புமிக்க "பாஸ்டில் சிறை தகர்ப்பு" நாள் கொண்டாட்டத்தை இலக்கு வைத்த ஐஎஸ் தீவிரவாதிகள்
பாரீஸ்: பிரான்ஸ் நாட்டு மக்கள் ஆண்டுதோறும் கொண்டாடுகிற பாஸ்டில் சிறை தகர்ப்பு நாள் அல்லது தேசிய தினம் ஐஎஸ் தீவிரவாதிகளின் வெறிச்செயலால் கருப்பு தினமாக மாறிவிட்டது.
பிரான்சில் பல நூற்றாண்டுகாலமாக நீடித்து வந்த மன்னராட்சி முறைக்கு முடிவு கட்டும் விதமாக நடந்ததுதான் பிரெஞ்சு புரட்சி. உலகில் மன்னராட்சி முறைகளுக்கு எதிராக பெரும்பாலான புரட்சிகளுக்கு பிரெஞ்சு புரட்சியின் தாக்கம் உண்டு.
கம்யூனிசம் பேசிய ரஷ்யாவிலும் சீனாவிலும் கூட பிரெஞ்சு புரட்சியின் தாக்கம் உண்டு. இந்த பிரெஞ்சு புரட்சியுடன் பிரான்ஸில் மன்னராட்சி முறை, கிறித்துவ திருச்சபைகளின் அதிகாரம் அத்தனையும் மண்ணோடு மண்ணாகிப் போயின...
கில்லட்டின் இயந்திரத்தில்...
"பிரான்ஸின் மன்னர் பதினாறாம் லூயி கில்லட்டின் இயந்திரத்தின் மூலம் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது" என நாம் வரலாற்றுப் பாடங்களில் படித்த சம்பவம் நிகழ்ந்ததும் இந்த பிரெஞ்சு புரட்சியின் விளைவுதான்... மெல்ல மெல்ல பிரான்ஸ் மன்னருக்கும் திருச்சபைக்கும் எதிராக உருவெடுத்த கிளர்ச்சிகள் உச்சத்தை எட்டிய நாள் 1789-ம் ஆண்டு ஜூலை 14.
பிரெஞ்சு புரட்சிக்கு அடித்தளம்
பிரான்ஸ் மன்னர், திருச்சபைகளின் அதிகாரச் சின்னமாக இருந்தது பாஸ்டில் சிறையில் குவிக்கப்பட்டிருந்த ஆயுதக் கிடங்குதான்... இந்த ஆயுதக் கிடங்கைதான் பிரெஞ்சு புரட்சியாளர்கள் இலக்கு வைத்தனர். 1789-ம் ஆண்டு ஜூலை 14-ந் தேதி இந்த பாஸ்டில் சிறையை தகர்த்து புரட்சியாளர்கள் தங்கள் வசமாக்கினர். இதுதான் பிரெஞ்சு புரட்சியின் உன்னதமாக கருதப்படுகிறது.
தேசிய தினம்...
இதுவே பிரான்ஸில் மன்னராட்சி ஒழிந்து மக்களாட்சி மலருவதற்கு அடித்தளமாக இருந்தது. ஆகையால் இந்த நாளை தங்களது நாட்டின் 'தேசிய தினமாக' கொண்டாடி வருகின்றனர் பிரான்ஸ் நாட்டு மக்கள்.
ராணுவ அணிவகுப்பு, வாண வேடிக்கை
நமது நாட்டின் குடியரசு தினம் போல இந்த பாஸ்டில் சிறை தகர்ப்பு நாள் அல்லது பிரான்ஸின் தேசிய தினத்தில் அந்நாட்டு ராணுவ அணிவகுப்பு நடைபெறும். முக்கிய நகரங்களில் வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்படும். இது பிரான்ஸ் மக்களுக்கு மரியாதைக்குரிய ஒரு விடுமுறை நாள்.
கருப்பு தினமானதே...
பிரான்ஸின் பெருநகரங்களில் மக்கள் பல்லாயிரக்கணக்கில் ஒன்று திரண்டு தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்துவர்... இப்படி மக்கள் ஒன்றுகூடுவதையே தங்களது இலக்காக வைத்து படுபயங்கரமான தாக்குதலை நடத்தி இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளை கருப்பு தினமாக்கிவிட்டனர் ஐஎஸ் கொடியவர்கள்.