விபத்தில் சிக்கிய லிபியா படகில் 100 சடலங்கள் மீட்பு... 70 சடலங்கள் கரை ஒதுங்கின
திரிபோலி: விபத்தில் சிக்கிய லிபியா படகில் பயணம் செய்த 170 ஆப்பிரிக்க இடம் பெயர்ந்தோர் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
சிரியா, ஈராக், லிபியா உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழலால் அந்நாட்டைச் சேர்ந்த பலர் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று குடியேறும் நோக்கத்துடன் கடலை கடக்க முயற்சிக்கின்றனர். அதே நேரத்தில் ஆப்பிரிக்க நாடுகளில் வறுமை காரணமாக மக்கள் வேறு நாட்டுக்கு சட்டவிரோதமாக குடிபுக முயற்சிக்கின்றனர். எனினும் மோசமான வானிலை மற்றும் படகுகள் காரணமாக இவ்வாறு சட்டவிரோதமாக கடலைக் கடக்க முயற்சிக்கும் பலரும் உயிரிழக்கின்றனர்.
அந்தவகையில், கடந்தவாரம் சப் சகாரன் ஆப்பிரிக்க பகுதியில் இருந்து சட்டவிரோதமாக இடம் பெயர்ந்தோர் சென்ற லிபியா படகு கடலில் மூழ்கி விபத்தில் சிக்கியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அந்நாட்டு கடலோரப் பாதுகாப்புப் படை அதிகாரிகள், 15 பேரை உயிருடன் மீட்டனர். மேலும், 16 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
சட்டவிரோதமாக...
உயிருடன் மீட்கப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்களில் சிலர் ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியா, எரித்திரியா ஆகிய நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக வேறு நாட்டுக்குச் செல்ல முயன்றவர்கள் என்பது தெரியவந்தது.
170 சடலங்கள்...
அதன் தொடர்ச்சியாக பாதுகாப்புப் படை அதிகாரிகள் நடத்திய தேடுதல் வேட்டையில் மூழ்கிய படகிலிருந்து 100 சடலங்கள் மீட்கப்பட்டன. இந்நிலையில், தற்போது லிபிய கடற்கரையில் சுமார் 70 சடலக்கள் கரை ஒதுங்கியுள்ளன.
சிக்கல்...
உயிரிழந்தவர்களிடம் உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால், அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உடனடி விபத்து...
கடலில் படகு சென்றுகொண்டிருந்த போது உடனடியாக கவிழ்ந்து இருக்கலாம். இதனால் பயணிகளுக்கு தப்பிப்பதற்கு எந்த ஒரு வாய்ப்பும் இல்லாமல் உயிரிழந்திருக்கலாம் என்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்துப் பகுதி...
மேலும், படகில் எந்த ஒரு சேதாரமும் காணப்படவில்லை என்றும், திரிபோலின் கிழக்கு பகுதியில் 60 கிலோ மீட்டார் தொலைவில் இந்தப் படகு விபத்தில் சிக்கியுள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள்.
சிரியர்கள் கைது...
அல்ஜிரியாவில் நேற்று 150 சிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஐரோப்பாவிற்கு சட்டவிரோதமாக சென்றுவிட லிபியாவிற்கு செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.