தமிழை தொடர்ந்து கவுரவிக்கும் கனடா.. அந்நாட்டு தேசிய கீதத்தை தமிழில் வெளியிட்டு கவுரவம்!
கனடா நாட்டின் 150வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அந்நாட்டு தேசிய கீதத்தை தமிழில் வெளியிட்டு அந்நாட்டு அரசு கவுரவித்துள்ளது.
ஒட்டவா: கனடா நாட்டின் 150வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அந்நாட்டு தேசிய கீதத்தை தமிழில் வெளியிட்டு அந்நாட்டு அரசு கவுரவித்துள்ளது. வழக்கமாக தமிழர் பண்பாட்டை கவுரவிக்கும் கனடா அரசு தற்போது அந்நாட்டு தேசிய கீதத்தை தமிழில் வெளியிட்டு தமிழுக்கு மகுடம் சூட்டியுள்ளது.
கனடா நாட்டில் தமிழ்மொழிக்கு என்று எப்போதும் தனி மரியாதை உண்டு. தமிழர்களின் கலாச்சார பண்டிகைகளை கொண்டாடுவது, பொது அறிவிப்புகளை தமிழில் வெளியிடுவது என்று உலக தமிழர்களை கனடா அரசு சமீபகாலமாக மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
இந்நிலையில், கனடா நாட்டின் 150வது சுதந்திர தினம் வருகிற ஜூலை 1ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக தமிழ் மொழி உட்பட மொத்தம் 12 மொழிகளில் கனடா தேசியகீதம் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் உட்பட 12 மெழிகளில்
தமிழ், அரபி, அமெரிக்க சைகை மொழி, கிரேக்கம், ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், சீன மான்டரின், பஞ்சாபி, ஸ்பானிஷ், டாகாலோக் ஆகிய 12 மொழிகளில் கனடா தேசிய கீதம் வெளியிடப்பட்டுள்ளது.
கவிஞர் கந்தவனம் என்பவரால்
இதுவரை ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழியில் மட்டுமே இருந்த கனடா தேசியகீதம், தற்போது நாடு தழுவிய நிலையில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் மற்றும் பேசப்படும் தமிழ் உள்ளிட்ட 12 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. கனடா தேசியகீதத்தின் தமிழ்மொழி ஆக்கம் கவிஞர் கந்தவனம் என்பவரால் எழுதப்பட்டுள்ளது.
இன்ப அதிர்ச்சி கொடுக்கும் ஜஸ்டின்
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்த கனடா பிரதமர் ஜஸ்டின், தமிழர்களின கலாச்சார பண்டிகையான பொங்கலுக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்தார். தமிழர்களின் சிலம்பம் உள்ளிட்ட பாரம்ரிய விளையாட்டுகளையும் விளையாடி உலகத் தமிழர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
தமிழுக்கு மகுடம்
இந்நிலையில் தற்போது கனடா நாட்டு தேசிய கீதத்தை தமிழில் வெளியிடச் செய்து தமிழர்கள் மீதும் தமிழ் மீதும் மிகுந்த மரியாதை கொண்டவர் என்பதை இதன்மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். அண்மையில் நோன்பு மேற்கொண்டிருக்கும் இஸ்லாமியர்களை கவுரவிக்கும் வகையில் தானும் நோன்பு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.