தாய்லாந்து குகை: 4 சிறுவர்கள் மீட்பு, மற்றவர்ளை மீட்க ஆயத்தமாகும் குழு
தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளரை மீட்கும் அபாயகரமான பணியினை ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கிய மீட்புப் பணியாளர்கள் 4 சிறுவர்களை பாதுகாப்பாக மீட்டு வந்தனர்.
தேர்ச்சி பெற்ற இரண்டு முக்குளிக்கும் வீரர்கள் ஒவ்வொரு சிறுவருடனும் நீந்தி, நீரில் மூழ்கிய கடினமான குகைப்பாதையைக் கடந்து சிறுவர்களை அழைத்து வந்தனர். இதையடுத்து, மீட்பு வீரர்களின் காற்றுக் குடுவையை மாற்றுவது உள்ளிட்ட பணிகள் காரணமாக நேற்றிரவு மீட்புப் பணி தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
திங்கள்கிழமை காலை குகை வாயிலில் நிலவும் பரபரப்பு, மீட்புப் பணி விரைவில் தொடங்கவுள்ளதைக் காட்டுகிறது.
நேற்று முதல் நாள் மீட்புப் பணி நடந்த விவரம் பற்றிய நேரலைப் பதிவு:
8:00 PM - 'குட் நைட்' தெரிவித்த தாய்லாந்து கடற்படை
அனைவரது பாராட்டுக்களையும் பெற்ற தாய்லாந்து கடற்படையான 'சீல்' தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குட் நைட் என்று பதிவிட்டுள்ளது.
7:49 PM -திங்கட்கிழமை காலை மீட்புப்பணி தொடரும்
மீட்கப்பட்ட சிறுவர்கள் நான்கு பேரும் மருத்துவமனையில் உள்ளனர். மீட்புப் பணிகள் மீண்டும் திங்கட்கிழமை காலை தொடங்கும்.
7:44 PM - மீட்புப்பணி நிறுத்தம்
குகையில் இருந்து 4 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக்குழுவின் தலைவர் தெரிவித்தார். நான்கு பேரும் நல்ல நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைக்கு மீட்புப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தலைவர் நரொங்சக் கூறினார்.
அடுத்தப் பணிக்கு தயார் செய்ய 10 மணி நேரமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
7:20 PM - குகைப்பகுதியில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர் ஒன்று சியாங் ராய் மருத்துவமனையை வந்தடைந்தது.
7:11 PM - குகைப்பகுதியில் இருந்து மேலும் ஒரு ஆம்புலன்ஸ் புறப்பட்டது.
7:04 PM - சியாங் ராய் மருத்துவமனையை அடைந்த ஆம்புலன்சுகள்
குகைப் பகுதியில் இருந்து புறப்பட்ட இரண்டு ஆம்புலன்சுகள் சியாங் ராய் மருத்துவமனையை வந்தடைந்தன.
6:56 PM - மீட்புப்பணி குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்வீட்
குகையில் சிக்கிக் கொண்ட சிறுவர்களை மீட்கும் பணிகள் தொடர்பாக தாய்லாந்து நாட்டு அரசுடன், அமெரிக்க அரசு நெருங்கி பணி புரிவதாக அதிபர் டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
6:53 PM - ஆறு சிறுவர்கள் மீட்பு
தற்போது வரை ஆறு சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக பல்வேறு உள்ளூர் ஊடகங்கள், ஏ.எஃப்.பி மற்றும் ராய்டர்ஸ் நிறுவனங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
ஆனால், பிபிசி தரப்பில் இருந்து இன்னும் எதுவும் உறுதி செய்யப்படவில்லை.
6:46 PM - மீட்புப் பணியாளர்களுக்கு பாராட்டு
மீட்புப் பணியில் ஈடுபட்டு வருவோருக்கு சமூக ஊடக பயன்பாட்டாளர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
6:33 PM- மீட்புப் பணி புகைப்படங்கள்
6: 31 PM - மேலும் ஒருவர் மீட்பு
மேலும் ஒரு சிறுவன் மீட்கப்பட்டதாக பிபிசியின் ஜொனாதன் ட்வீட் செய்துள்ளார். இதுவரை 4 சிறுவர்கள் தற்போது மீட்கப்படுள்ளனர்.
6:29 PM - எவ்வளவு பேர் மீட்கப்பட்டனர்?
இதுவரை 6 சிறுவர்கள் மீட்கப்பட்டதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. எனினும், தாய்லாந்து கடற்படை மூன்று சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக ட்வீட் செய்துள்ளது.
6:12 PM - பலவீனமான சிறுவர்கள் முதலில் வெளியேற்றப்படுவார்கள்
பலவீனமாக இருக்கும் சிறுவர்களை முதலில் வெளியே கொண்டுவர வேண்டும் என்று இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் ஆஸ்திரேலிய மருத்துவர் ஒருவர் முடிவு செய்துள்ளார்.
இதனை, பாங்காக்கை சேர்ந்த செய்தியாளர் ஒருவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
5:59 PM - மேலும்நான்கு சிறுவர்கள் விரைவில் வெளிவருவார்கள் என எதிர்பார்ப்பு
மேலும் நான்கு சிறுவர்கள் குகையில் இருந்து விரைவில் வெளிவருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக லெஃப்டினன்ட் ஜெனரல் கொங்சீப் கூறியுள்ளார்.
சாம்பர் 3 பகுதியை அவர்கள் அடைந்துவிட்டதாகவும், விரைவில் வெளிவருவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
5:51 PM - அப்பகுதியில் இருந்து இரண்டு ஆம்புலன்ஸ்கள் புறப்பட்டுள்ளன. அதேபோல, அங்கிருந்து ஒரு ஹெலிகாப்டர் புறப்படுவதை செய்தியாளர்கள் சிலர் ட்வீட் செய்துள்ளனர்.
ஆனால், அதில் யார் இருக்கிறார்கள், அது எங்கு செல்கிறது என்று தெளிவாக தெரியவில்லை.
5:32 PM - சியாங் ராய் சுகாதாரத்துறை தலைவர் கூறுகையில், "இரண்டு சிறுவர்கள் வெளியேற்றப்பட்டனர்" என்றார். தற்போது அவர்கள் அப்பகுதியில் அமைக்கப்பட்ட மருத்துவமனையில் உள்ளனர்.
அவர்களுக்கு உடல் பரிசோதனை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5:30 PM - தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களில் இருவர் வெளியேற்றப்பட்டதாக உள்ளூர் அதிகாரி கூறியதாக ராய்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த மீட்பு பணியினை 'டி-டே' என அழைக்கும் அதிகாரிகள், வெளியே வர அச்சிறுவர்கள் பலமாகவும் தயாராகவும் உள்ளதாக கூறுகின்றனர்.
உள்ளூர் நேரப்படி 10:00 மணிக்கு மீட்பு குழுவினர் குகைக்குள் நுழைந்தனர் என செய்தியாளர்கள் சந்திப்பின் போது ஒரு அதிகாரி கூறினார்.
மீட்பு பணித்திட்டம்
தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் திட்டம் குறித்த தகவல்களை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.
- என்ன உபகரணங்கள்?: காற்று அடைக்கப்பட்ட டாங்குகள், முழு முக மாஸ்குகள்
- ஒரு சிறுவருடன் இரண்டு முக்குளிப்போர் இருப்பார்கள்
- மீட்பு பணியாளர்கள் போட்டுள்ள கயிறு அவர்களை வழிநடத்த, அனைவரும் ஒன்றாக முக்குளிப்பார்கள்.
- மிகவும் குறுகிய பாதை வரும்போது, தங்கள் பின்னாலிருக்கும் டாங்குகளை விடுவித்து, அதனை உருட்டிவிடுவார்கள். அதன் வழியாக அந்த சிறுவரை வழிநடத்துவார்கள்
- சாம்பர் 3 முதல் குகையின் முகத்துவாரத்திற்கு நடந்து செல்லலாம்.
சிறுவர்களுக்கு முக்குளிப்பது குறித்து குறைந்தளவிலாவது தெரிந்திருக்க வேண்டும், திடமான மனத்தோடு, பதட்டமில்லாமல் இருக்க வேண்டும்.
முன்னதாக இன்று காலை, அவசியம் அல்லாத ஊழியர்கள் சம்பவ இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். முக்குளிப்பவர்கள், மருத்துவர்கள் மற்றும் பாதுகாப்பு படைகள் மட்டுமே அங்கு உள்ளனர்.
வெளிநாட்டை சேர்ந்த 13 முக்குளிப்பவர்கள் மற்றும் தாய்லாந்து கடற்படையை சேர்ந்த 5 முக்குளிப்பவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர் நான்கு நாட்களில் மீட்க வாய்ப்புள்ளதாக மீட்புப்பணி குழுவின் தலைவர் முன்பு தெரிவித்திருந்தார்.
தற்போது வரை அங்கு சூழ்நிலை "கச்சிதமாக" உள்ளதாக நரோங்சக் ஒசோட்டனாகோர்ன் தெரிவித்தார்
கடந்த ஜூன் 23ஆம் தேதி இந்த குகையை பார்ப்பதற்காக சென்ற கால்பந்து வீரர்களான இந்த 12 சிறுவர்களும், அவரது பயிற்சியாளரும் அங்கு நீர்மட்டம் உயர்ந்ததால் சிக்குண்டனர்.
- ''கவலைப்படாதீர்கள்'' - தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்கள் கடிதம்
- ஒரு மீட்புதவியாளர் மரணம்: குகையில் சிக்கிய சிறாரை மீட்கும் பணி தீவிரம்
குகையில் சிக்கியுள்ளவர்களுக்கு தேவையான உணவு, ஆக்ஸிஜன் மற்றும் மருத்துவ உதவிகளை மீட்புப்பணி குழுவினர் அளித்து வரும் வேளையில், அவர்களை குகையிலிருந்து மீட்பதற்கான பணியில் சர்வதேச குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த குகை அமைந்துள்ள சியாங் ராய் மாகாணத்தின் ஆளுநரான நரோங்சக், "குகையில் சிக்கியுள்ளவர்களின் உடல்நிலை, நீரின் மட்டம் மற்றும் வானிலை போன்றவற்றை பார்க்கும்போது, தற்போது முதல் அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களில் அவர்களை மீட்பதற்கான சிறப்பான சூழ்நிலை நிலவுகிறது" என்று கூறுகிறார்.
பெற்றோர்களுக்கு கடிதம் எழுதியசிறுவர்கள்
இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) காலை நேரத்தில், குகையில் சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர் தங்களது குடும்பத்திற்கு எழுதியுள்ள கடிதங்களை முக்குளிப்பவர்கள் மூலம் அனுப்பி வைத்தனர்.
அதில், ''கவலைப்படாதீர்கள்.. நாங்கள் தைரியமாக உள்ளோம்'' எனக் கூறி தங்களது பெற்றோர்களுக்கு தெரிவித்துள்ளனர்.
''ஆசிரியரே, எங்களுக்கு நிறைய வீட்டுப்பாடங்களைத் தராதீர்கள்'' என ஒரு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. சிறுவர்களில் பெற்றோர்களிடம் மன்னிப்பு கேட்டு, இச்சிறுவர்கள் அணியின் கால்பந்து பயிற்சியாளரும் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
''அன்பிற்குரிய சிறுவர்களின் பெற்றோர்களே. தற்போது அனைவரும் நலமாக உள்ளனர். மீட்பு குழுவினர் எங்களை நன்றாக பார்த்துக்கொள்கின்றனர்'' என 25 வயதான பயிற்சியாளர் கூறியுள்ளார்.
''என்னால் முடிந்தவரைச் சிறுவர்களை கவனித்துக்கொள்வேன் என வாக்குறுதி அளிக்கிறேன். எங்களுக்கு உதவியளிக்க வரும் அனைவருக்கும் நன்றி'' எனவும் அவர் கூறியுள்ளார்.
- தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களை மீட்கும் வழிகள் என்னென்ன?
- தாய்லாந்தில் பலத்த மழை எதிர்பார்ப்பு: சிறுவர்கள் சிக்கிய குகையில் வெள்ளம் உயருமா?
தற்போதைய திட்டம் என்ன?
அபாயகரமான இந்த பணியில் பெருமளவிலான ராணுவம் மற்றும் பல்வேறு தரப்பை சேர்ந்தவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
சிறுவர்களுக்கு பிராண வாயு சிலிண்டர்களை வழங்க சென்ற முக்குளிப்பவர் ஒருவர் திரும்பும் வழியில் உயிரிழந்த சம்பவம், அங்கு நிலவும் மோசமான சூழ்நிலையை உணர்த்துவதாக மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ள குழுவினர் கருதுகின்றனர்.
சிறுவர்கள் தற்போது ஒரு உலர்ந்த இடத்தில் உள்ளதாகவும், ஆனால் மழை தொடர்ந்து பொழியும் பட்சத்தில் அவர்கள் இருக்கும் இடத்தின் அளவு 108 சதுர அடிகளாக குறைவதற்கு வாய்ப்புள்ளதாகவும் நரோங்சக் கூறுகிறார்.
சிறுவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு முக்குளித்தல் பயிற்சி தேவையென்றும், ஆனால் இன்னமும் அதை அவர்கள் கற்கவில்லை என்றும் அவர் கூறுகிறார்.
முன்னதாக, சிறுவர்கள் குகையிலிருந்து மீட்கப்படுவதற்கு சில மாதகாலமாகும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது ராட்ச இயந்திரங்களை கொண்டு குகையில் துளையிட்டு அங்குள்ள நீரை வெளியேற்றி, அவர்களை பத்திரமாக வெளியே அழைத்து வரும் பணி முழுவீச்சியில் நடைபெற்று வருகிறது.
பிற செய்திகள்:
- "அமெரிக்காவின் மனநிலை வருத்தமளிக்கிறது" - கோபத்தில் வட கொரியா
- உடல் துர்நாற்ற பிரச்னைக்கு உருவாகிறது தீர்வு
- இலங்கை: 'காணமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் தேவையில்லை'
- ஜப்பானில் கனமழை: ஹிரோஷிமா நிலச்சரிவில் 50 பேர் பலி