தென் சீனா கடற்பரப்பில் ஏவுகணைகளை குவிக்கும் சீனா!
பெய்ஜிங்: சர்ச்சைக்குரிய தென் சீனா கடற்பரப்பில் சீனா ஏவுகணைகளை நிறுத்தியிருப்பதால் அப்பிராந்தியத்தில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இயற்கை வளம் நிறைந்த கடல் வழிப் போக்குவரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த தென் சீனா கடற்பரப்பின் பெரும்பகுதியை சீனா சொந்தம் கொண்டாடுகிறது. ஆனால் வியட்நாம், தைவான், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருனே ஆகிய நாடுகள் சீனாவின் உரிமை கோரலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் தென் சீனா கடற்பரப்பில் சட்டவிரோதமாக செயற்கை தீவுகளை சீனா அமைத்து போர் விமானங்களை நிறுத்தி வைத்திருக்கிறது. சீனாவின் இந்த சட்டவிரோத செயற்கை தீவுகள் அருகே அமெரிக்கா போர்க்கப்பல்களை ரோந்து பணிக்கு அடிக்கடி அனுப்பி வருகிறது.
மேலும் இக்கடற்பரப்பில் இந்தியாவுடன் இணைந்து கூட்டு ரோந்து மேற்கொள்வது தொடர்பாக அமெரிக்கா பேசுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தியாவோ, ஐநாவின் பன்னாட்டுப் படைகளின் கீழ்தான் ரோந்து பணியில் ஈடுபட முடியும் என கூறிவருகிறது.
அமெரிக்காவின் இந்த கூட்டு ரோந்து முயற்சிக்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இந்நிலையில் சர்ச்சைக்குரிய தீவுப் பகுதிகளில் சீனா ஏவுகணைகளை நிறுத்தி வைத்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த 14-ந் தேதி எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் உட்டி என்கிற தீவுகளில் இந்த ஏவுகணைகள் நிறுத்தப்பட்டுள்ளதை அம்பலப்படுத்தியுள்ளது. 40 ஆண்டுகாலத்துக்கும் மேலாக இந்த உட்டி தீவுகளை சீனா தன் வசம் வைத்திருந்தாலும் தைவான் மற்றும் வியட்நாம் நாடுகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன.
சீனாவின் இந்த மும்முரமான ராணுவ நகர்வால் தென்சீனா கடற்பரப்பில் பெரும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.