இலங்கையின் புதிய அரசும் சீனாவுடன் நட்பை தொடரும்: சீனா நம்பிக்கை
பீஜிங்: இலங்கையின் புதிய அதிபராக வெற்றி பெற்றுள்ள சிறிசேன எங்களுக்கு ஆதரவாக செயல்படுவார் என்று சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இலங்கை அதிபர் தேர்தல் முடிவு குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஹாங் லீ செய்தியாளர்களிடம் கூறியதாவது: 'இலங்கையின் புதிய அதிபராக தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சிறிசேனவுக்கு சீனா வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறது.
அவர் இலங்கை அரசுக்கும், இலங்கை மக்களுக்கும் தலைமையேற்று நாட்டின் வளர்ச்சியில் ஒரு புதிய அத்தியாயத்தை கொண்டு வருவார் என்று நாங்கள் நம்புகிறோம்.
இலங்கையின் புதிய அதிபர் சீனாவுடனான நட்புரீதியான கொள்கைகளை தொடர்ந்து பின்பற்றுவார் என்றும், சீனா தொடர்புடைய திட்டங்களுக்கு அவர் தொடர்ந்து ஆதரவு அளிப்பார் என்றும் நாங்கள் நம்புகிறோம்.
சீனா-இலங்கை நடுவேயான நட்பு இரு தரப்புக்கும் சரிசமமாக நலன் தரக்கூடியதும், பலன்தரக்கூடியதுமாகும். எனவே புதிய அரசு தனது கொள்கைகளை மாற்றிக்கொள்ளாது என்று நம்புகிறோம்." என்றார்.
இலங்கை புதிய அதிபர் சிறிசேனவும், இந்தியா மற்றும் சீனாவுடன் சரிசமமான நட்புறவை இலங்கை தொடரும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.