சீனாவிலும் ஒரு தெர்மாகோல் விஞ்ஞானி.. பனிப்பாறைகள் உருகாமல் இருக்க போர்வை.. நெட்டிசன்கள் கலகல!
பெய்ஜிங்: உலகம் வெப்பமயமாதலால் பனிப்பாறைகள் உருகாமல் இருக்க போர்வைகளை சீனா போர்த்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகளுக்கே பெரும் அச்சுறுத்தலாக இருப்பது தீவிரவாதம். அதை விட பெரிய பிரச்சினையாக பருவநிலை மாற்றம் தற்போது ஏற்பட்டுள்ளது.
இதை தடுக்க விஞ்ஞானிகள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுகுறித்து உலக அரங்கில் அவ்வப்போது பல சுற்றுச்சூழலியலாளர்கள் பேசி வருகிறார்கள்.
பனிக்கட்டிகள்
ஆனால் சீனாவில் பனிக் கட்டிகள் உருகுவதை தடுக்க போர்வைகளை பயன்படுத்தி வருகிறார்கள். பனிக்கட்டிகள் உருகுவதை தடுக்க உயர் தரத்தில் உருவாக்கப்பட்ட இந்த ஜியோடெக்ஸ்டைல் போர்வைகள், சுற்றுச்சூழலுக்கு இணக்கமாக இருக்கும்.
நிரூபிக்கப்படவில்லை
இதை பனிக்கட்டிகளின் மேல் போர்த்துவதால் பனிக்கட்டி உருகும் வேகம் குறையும். மேலும் பனிக்கட்டிகளை பாதுகாக்கும் கேடயமாகவும் இந்த போர்வைகள் இருக்கும் என சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். ஆனால் அது ஆதாரப்பூர்வமாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை.
சோதனை
வாங்க் பெய்டெங் தலைமையிலான ஆய்வாளர்கள் கடந்த 7 ஆண்டுகளாக இதுகுறித்து ஆய்வுகளை நடத்தி வந்தனர். அந்த முடிவுகளின்படி கடந்த ஆகஸ்டு மாதம் முதல் இதை செயல்படுத்த தொடங்கியுள்ளனர். சீனாவிலுள்ள சிச்சூவான் மாகாணத்தின் டாகு பகுதியில் ஜியோடெக்ஸ்டைல் போர்வைகளை 500 சதுர மீட்டர் அளவிறகு உருவாக்கி இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
விஞ்ஞானி
சுவிட்சர்லாந்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ரோனே கிளேசியர் என்ற பகுதியில் இதே போல் தெர்மல் போர்வைகள் போர்த்தப்பட்டு பனி உருகுவது தாமதப்படுத்தப்பட்டு வருகிறது. இதை பார்க்கும் நெட்டிசன்கள் ஊருக்கு ஊர் விஞ்ஞானிகள் இருக்கிறார்கள். ஆனாலும் தெர்மாகோல் போட்டு வைகை ஆற்றை மூடிய எங்க ஊர் விஞ்ஞானி போல் யாரும் வரமாட்டார்கள் என கூறி வருகிறார்கள்.