சீனாவில் டெல்டா வகை கொரோனா வைரஸ் விஸ்வரூபம்: பெய்ஜிங் உட்பட 15 நகரங்களில் பாதிப்பு கிடுகிடு உயர்வு
நான்ஜிங்: சீனாவில் டெல்டா வகை கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. சீனா தலைநகர் பெய்ஜிங் உள்ளிட்ட 15 நகரங்களில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிப்பு மிக கடுமையாக உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Recommended Video
சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்துதான் 2019-ல் கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்குப் பரவியது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் சீனா மற்றும் உலக நாடுகளில் கொரோனா பாதிப்பை உறுதி செய்து உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.
உலக நாடுகளில் இதுவரையிலான மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19.8 கோடியாக அதிகரித்திருக்கிறது. உலகின் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 42,24,124. உலகிலேயே அமெரிக்காதான் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்ததாக 2-வது இடத்தில் இந்தியா உள்ளது.

அமெரிக்காவில் கடும் பாதிப்பு
கொரோனா வைரஸ் வெவ்வேறு நிலைகளில் உருமாறி உலக நாடுகளை கடுமையாக பாதித்து வருகிறது. இதில் டெல்டா வகை வைரஸ் அதிவேகமாக பரவி கடுமையான பாதிப்புகளை உருவாக்கி வருகிறது. அமெரிக்காவில் தற்போது ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை தொட்டிருக்கிறது.

சீனாவில் மீண்டும் பாதிப்பு
இந்த நிலையில் சீனாவில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது மிக மோசமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் நான்ஜிங் விமான நிலையத்தில்தான் ரஷ்யாவில் இருந்து வந்த துப்புரவு பணியாளர் ஒருவரிடம் இந்த டெல்டா வகை வைரஸ் முதலில் கண்டறியப்பட்டது. இதனையடுத்து நான்ஜிங்கில் இருந்து விமான சேவைகள் 2 வார காலத்துக்கு நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் நான்ஜிங் நகரில் கொரோனா பரிசோதனைகள் கடுமையாக்கப்பட இருப்பதாகவும் சீனா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெய்ஜிங் உட்பட 15 நகரங்கள்
நான்ஜிங்கில் இருந்து தற்போது பெய்ஜிங் உட்பட 15 நகரங்களுக்கு இந்த டெல்டா வகை வைரஸ் பரவி இருக்கிறது. பெஜ்யிங்கில் கடந்த 175 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்திருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து சீனாவுக்கு வருபவர்கள் 21 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். புதிய டெல்டா வகை வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களில் 7 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தடுப்பூசி குறித்து கேள்வி
இதனையடுத்து சீனாவின் தடுப்பூசி குறித்து கேள்விகளும் சந்தேகங்களும் எழுப்பப்பட்டு வருகின்றன. சீனாவில் கொரோனா கால கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் ஒன்று கூடும் போது இடைவெளியும் நிற்க வேண்டும்; ஒருவருக்கு ஒருவர் பேசக் கூடாது என்பது உள்ளிட்ட கடுமையான விதிகள் அமல்படுத்தப்படுகின்றனவாம். இது தொடர்பாக பெகிங் பல்கலைக் கழக மருத்துவமனை வல்லுநர்கள் கூறுகையில், டெல்டா வகை வைரஸ் அதிவிரைவாக பரவும் தன்மை கொண்டதாக இருக்கிறது. இதுவரை 200க்கும் அதிகமானோருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஜியாமென் நகரத்தில் 4 பேருக்கு டெல்டா வகை வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்கின்றனர்.

அதிகாரப்பூர்வ பாதிப்பு
சீனாவில் அதிகாரப்பூர்வமான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92,875. இதுவரை மொத்தம் 4,636 பேர் சீனாவில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தற்போதைய நிலையில் 932 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில் 25 பேர் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. சீனாவில் இதுவரை 40% பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications