இந்தியாவுக்கு மிக அருகே.. எவரெஸ்ட் சிகரத்தில் புதிய ஆய்வகம்! சீனாவின் புதிய பிளான் இதுதான்
பெய்ஜிங்: உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் சீனா புதிய ஆய்வகத்தை அமைத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே உறவு சொல்லிக் கொள்ளும் வகையில் இல்லை. அதிலும் குறிப்பாக கல்வான் மோதலுக்குப் பின்னர், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேலும் மோசமானது.
இதன் காரணமாக இரு தரப்பும் ராணுவத்தைத் தொடர்ந்து குவித்து வருகிறது. இதனால் எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழலே நிலவுகிறது.

எவரெஸ்ட்
இதற்கிடையே உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் சீனா புதிய ஆய்வகம் ஒன்றை அமைத்துள்ளது. ஆய்வகம் என்ற உடன் பதறவிட வேண்டும். வானிலை மாற்றங்களை கண்காணிக்கும் வானிலை ஆய்வு மையத்தைத் தான் சீனா அங்கே நிறுவியுள்ளது. இந்த மையம் குழு, கடல் மட்டத்தில் இருந்து சுமார் 8,830 மீட்டர் உயரத்தில் எவரெஸ்ட் சிகரத்தில் அமைந்துள்ளது. இந்த மையம் தானியங்கி முறையில் இயங்கும்.

12 நிமிடங்களுக்கு ஒரு முறை
இதன் சோதனையையும் சீன ஆய்வாளர்கள் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். சோலார் பேனல்கள் மூலம் இந்த ஆய்வு மையம் தனக்கான மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ளும். கடுமையான வானிலைகளையும் சமாளித்துக் குறைந்தது இரு ஆண்டுகளுக்கு இருக்கும்படி, இந்த ஆய்வு மையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தரவுகளைப் பெற இந்த மையம் செயற்கைக்கோளுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு 12 நிமிடங்களுக்கு ஒருமுறை இந்த வானொலி மையம் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும்.

அதிகபட்ச உயரம்
இதற்கு முன்னதாக எவரெஸ்டின் தெற்குப் பகுதியில் 8,430 மீட்டர் உயரத்தில் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க ஆய்வாளர்கள் வானிலை ஆய்வு மையத்தை நிறுவியதே அதிகபட்ச உயரமாக இருந்தது. அதேபோல சீனாவும் ஏற்கனவே மலையின் வடக்குப் பகுதியில் 7,028 மீட்டர், 7,790 மீட்டர் மற்றும் 8,300 மீட்டர் உயரத்தில் மூன்று வானிலை ஆய்வு மையங்களை ஏற்கனவே நிறுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆய்வு
இந்த நிலையத்தை அமைக்க சுமார் 50 கிலோ எடையுள்ள உபகரணங்கள் தேவை. இவை அனைத்தும் மலையின் உச்சிக்கு தனித்தனியாகக் கொண்டு செல்லப்பட்டு மீண்டும் இணைக்கப்படும். சுற்றியுள்ள பகுதியிலிருந்து இந்த நிலையம் தொடர்ச்சியாகத் தரவுகளைப் பெறும். முதலில் ஆய்வாளர்கள் இமயமலையின் உச்சத்தை அடைந்ததும், கண்காணிப்பு மற்றும் மாதிரிகளைச் சோதனை செய்யும் பணிகளை மேற்கொண்டனர்.

நோக்கம்
பனியின் தடிமன் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகள் அங்கு மேற்கொள்ளப்பட்டன. 5,800 மீட்டர் மற்றும் 8,300 மீட்டர் உயரத்தில் பனி மற்றும் பனிப் பாறையின் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. எவரெஸ்ட் சிகரத்தின் மிக உயரமான பகுதிகளில் உள்ள கிரீன்ஹவுஸ் வாயுக்களின் பாதிப்பு மற்றும் காலநிலை மாற்றத்தின் பாதிப்பை கண்டறிவதே இந்த ஆய்வின் முக்கிய நோக்கமாக உள்ளது.

7 மையங்கள்
பூமியின் மிக உயரத்தில் பனிக்குள் என்ன இருக்கிறது என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம் என்றும் அதற்காகத் தான் இந்த முயற்சி எடுக்கப்படுவதாகவும் சீன ஆராய்ச்சியாளர் வூ ஜியாங்குவாங் தெரிவித்தார். இப்போது 5,200 மீட்டர் முதல் 8,300 மீட்டர் வரையிலான உயரத்தில் இயங்கும் ஏழு வானிலமை மையங்கள் சீனாவுக்குச் சொந்தமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications