தீவுகளை கைப்பற்றும் போர் ஒத்திகையில் சீன ராணுவம்; அடுத்து என்ன நடக்கும்?
பெய்ஜிங்: அமெரிக்காவின் நான்சி பெலோசி வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சீனா தைவான் கடற்பரப்பில் போர் ஒத்திகையில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது தீவுகளை தாக்கும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
முன்னதாக "தைவானை தனிமைப்படுத்த அமெரிக்கா அனுமதிக்காது" என நான்சி தெரிவித்திருந்த நிலையில், பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
ஏற்கெனவே உக்ரைனை நேட்டோவில் இணைய வற்புறுத்தி தற்போது ரஷ்ய-உக்ரைன் போர் ஏற்பட அமெரிக்க முக்கிய காரணமாக இருந்த நிலையில், அடுத்து சீனா-தைவான் போருக்கு அமெரிக்கா அடித்தளமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தைவான் சீனாவின் ஒரு அங்கம் என அந்நாடு சொந்தம் கொண்டாடுகிறது. ஆனால், இதை தனிநாடாக அமெரிக்கா கருதுகிறது. அதாவது சீனாவை கலந்தாலோசிக்காமல் தைவான் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, ஒப்பந்தம் மேற்கொள்வது என அமெரிக்கா சில நடவடிக்கையில் இறங்கியது. இது சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இருந்த உரசல்களை மேலும் தீவிரமாக்கியது. இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு சென்றிருந்த நிலையில், சீன இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தைவானை ஒட்டியுள்ள கடற்பரப்பில் போர் பயிற்சியை மேற்கொண்டது.
முன்னெப்போதும் இல்லாத அளவில் ஏவுகணைகளை வீசி போர் ஒத்திகையில் ஈடுபட்டு வரும் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தின் நடவடிக்கைகள் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது நான்சி "தைவானை தனிமைப்படுத்த அமெரிக்கா அனுமதிக்காது" என்று கூறியுள்ளார். மேலும், "தைவான் பிரதிநிதிகள் மற்ற நாடுகளுக்கு சென்று தங்கள் உரிமை குறித்து பேசுவதை சீனா தடுத்திருக்கலாம் ஆனால் அமெரிக்காவின் பிரதிநிதிகள் தைவானுக்கு செல்வதை தடுப்பதன் மூலம் தைவானை சீனாவால் தனிமைப்படுத்திவிட முடியாது" என்று டோக்கியோவில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார். இது சீனாவின் கோபத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தைவான் ஜலசந்தியில் தீவைக் கைப்பற்றும் பயிற்சிகளை சீன ராணுவம் கடுமையாக மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் அதிநவீன போர் விமானங்கள் என ராணுவத்தின் அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கி இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும்,
பயிற்சி எப்போது முடியும் என்பது குறித்த விவரங்கள் தற்போதுவரை வெளியிடப்படவில்லை. சீனா இவ்வாறு கடுமையாக போர் பயிற்சி மேற்கொள்வது இதுவே முதன்முறை என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் 'ஜனநாயக தைவானை ஆதரிப்பீர்' என தைவான் ஜனாதிபதி சாய் இங்-வென் சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும், எங்கள் அரசாங்கமும் இராணுவமும் சீனாவின் இராணுவப் பயிற்சிகள் மற்றும் போர் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன, எங்கள் ராணுவம் தேவையான பதிலடிக்கு தயாராக உள்ளதாக சாய் இங் கடந்த சனிக்கிழமை தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தார். மேலும் இந்த கண்காணிப்பால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏதும் இருக்காது என தைவான் ராணுவம் தெரிவித்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க இந்த சர்ச்சைகள் சீனா-அமெரிக்கா போருக்கு வழிவகுக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், இந்த கருத்தை சீனாவின் ரென்மின் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் துறை பேராசிரியரான ஷி யின்ஹாங் மறுத்துள்ளார். தற்போது வளர்ந்துள்ள நவீன தொழில்நுட்பங்கள் தகவல் பரிமாற்றத்தை இடை மறித்து கேட்கும் திறன் கொண்டவையாகும். எனவே மோதல் போக்கு அதிகரிக்கும். ஆனால் மோதல் ஒருபோதும் நடைபெறாது என தெரிவித்துள்ளார்.
தைவான் கடற்பரப்பில் பதற்றம் அதிகரித்துள்ளதையடுத்து அமெரிக்கா தனது USS ரொனால்ட் ரீகன் விமானம் தாங்கி போர்க்கப்பலை மேற்கு பசிபிக் பகுதியில் கண்காணிப்பை பலப்படுத்த அனுப்பி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.