பழைய மாதிரியே நடக்குதே.. அதிகரிக்கும் கொரோனா.. மீண்டும் ஒரு அலை பரவுமோ? சீனாவால் கிளம்பும் பீதி
பீஜிங்: சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், உண்மையான உயிரிழப்பு எண்ணிக்கைகளை அந்த நாடு மூடி மறைப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இதுஒருபுறம் இருக்க ஆண்டு இறுதியில் கொரோனா அதிகரிக்க தொடங்கியிருப்பது மீண்டும் உலகம் முழுவதும் ஒரு கொரோனா அலைக்கு வழி ஏற்படுத்துமோ என்ற அச்சமும் பரவலாக எழுப்பப்படுகிறது.
உலகில் முதன் முதலாக கொரோனா பரவிய நாடு சீனாதான். அந்த நாட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தான் கொரோனா முதன் முதலாக இந்த உலகத்திற்கு அறிமுகம் ஆனது.
அதன்பிறகு சில மாதங்களில் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா
ஒட்டு மொத்த உலகத்தையும் லாக் டவுனுக்குள் தள்ளிய கொரோனா பெருளாதாரத்தையும் பெரிதாக தாக்கி விட்டு சென்றது. ஆனாலும் கொரோனா முதன் முதலாக கண்டறியப்பட்ட சீனாவில் தொற்று பாதிப்பு பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது அவ்வளவாக பரவவில்லை. ஆனால், தற்போது உலகின் பெரும்பாலும் கொரோனா கட்டுக்குள் வந்துவிட்ட நிலையில், சீனாவில் கொரோனா உக்கிர தாண்டவம் ஆடத்தொடங்கியுள்ளது. கொரோனா துவக்க காலத்தில் பரவிய போது ஜீரோ கோவிட் பாலிசியை கையில் எடுத்து சீனா கொரோனாவை கட்டுப்படுத்தியது.

பலி எண்னிக்கை 5,237 ஆக உயர்வு
ஆனால், இந்த முறை ஜீரோ கோவிட் பாலிசி சீனாவுக்கு கை கொடுக்கவில்லை. ஏனென்றால் சீனாவின் மித மிஞ்சிய கட்டுப்பாடுகளுக்கு அந்த நாட்டில் பெரிதும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இதனால் வேறு வழியின்றி தற்போது கட்டுப்பாடுகளை சீனா சற்று தளர்த்தியுள்ளது. ஆனால் கட்டுப்பாடுகளை தளர்த்திவிட்ட நிலையில், சீனாவில் கொரோனா பாதிப்புக்கு தலைநகர் பெய்ஜிங்கில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,237 ஆக உயர்ந்துள்ளது.

கணக்கில் சேர்ப்பது இல்லை..
இருந்தாலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நீரிழிவு, இதய நோய் பாதிப்பு உள்பட பிற நோய்
வாய்ப்பட்டவர்கள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனாலும் இந்த இறப்புகளை சீனா கணக்கில் சேர்ப்பது இல்லை என்ற குற்றச்சாட்டும் இல்லாமல் இல்லை. கடந்த 4 ஆம் தேதிக்கு பிறகு சீனாவில் யாரும் கொரோனாவால் இறக்கவில்லை என்று கூறப்பட்ட நிலையில் தற்போது 2 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருபக்கம் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

3 கொரோனா அலைகள் ஏற்படும்
குறிப்பாக வரும் குளிர்காலத்தில் சீனாவில் 3 கொரோனா அலைகள் பரவும் என்று அந்த நாட்டின் தொற்று நோய் நிபுணர் வூசன்யூ கணித்து இருக்கிறார். சீனாவில் வரும் ஜனவரி 21 ஆம் தேதி புத்தாண்டு கொண்டாடப்படும். இந்த புத்தாண்டை கொண்டாட ஏராளமான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதுண்டு. எனவே, டிசம்பர் இறுதியில் இருந்து ஜனவரி, பிப்ரவரி மார்ச் மாதம் வரை அந்த நாட்டில் 3 கொரோனா அலைகள் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் உலக அளவில் கொரோனா பரவல்?
இருந்தாலும் சீனாவில் பெருமளவு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதால் தீவிர பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்றே நிபுணர்கள் சொல்கின்றனர். ஷாங்காய் நகரில் தற்போதே கொரோனா மிக அதிகமாக பரவி வருகிறது. பல பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனிடையே, சீனாவில் ஆண்டு இறுதியில் கொரோனா அலை பரவத்தொடங்கியிருப்பது மீண்டும் உலக அளவில் கொரோனா பரவலை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சத்தையும் ஒரு பக்கம் கிளப்பி விட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications