கொரோனா வைரஸ் நிச்சயம் இறுதி பெருந்தொற்றாக இருக்காது... எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு
ஜெனீவா: நாம் காணும் இறுதி பெருந்தொற்றாக கொரோனா வைரஸ் நிச்சயம் இருக்காது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகெங்கும் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்புகள் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பிரிட்டனில் தற்போது கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனா வைரஸ் மற்ற வகைகளைவிட வேகமாகப் பரவும் என்று தகவலும் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை உலகெங்கும் சுமார் எட்டு கோடி பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சுமார் 17.5 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதில்லை
இந்நிலையில், கொரோனா வைரஸ் குறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம்,"கொரோனா தொற்றிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. நம் உலகம் மிக நீண்ட காலமாகப் பதற்றம் மற்றும் புறக்கணிப்பு ஆகியவற்றை சுற்றியே இயங்குகிறது. கொரோனா வைரஸ் போன்ற பெருந்தொற்றுகளை கட்டுப்படுத்த நாம் அதிகளவில் பணத்தைச் செலவிடுகிறோம். ஆனால் இது முடிந்ததும், அதை மறந்துவிடுகிறோம். இதன் பின், அடுத்து வரவிருக்கும் பெருந்தொற்றுகளைத் தடுக்க எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் செய்வதில்லை. இது மிகவும் ஆபத்தானது" என்றார்.

தயாராக இல்லை
சர்வதேச ஆயத்த கண்காணிப்பு வாரியம் கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், பெருந்தொற்றுகள் ஏற்படும்பட்சத்தில் உலகம் தயார் நிலையில் உள்ளதா என்பது குறித்த முதல் ஆண்டு அறிக்கையை வெளியிட்டது. அதில் பேரழிவு தரக்கூடிய தொற்றுகளை எதிர்கொள்ளும் வகையில் இந்த உலகம் தயார் நிலையில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இறுதி பெருந்தொற்றாக இருக்காது
மேலும் அவர், "வரும் காலத்தில் நாம் வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது கொரோனா வைரஸ் நிச்சயம் இறுதி பெருந்தொற்றாக இருக்காது. இதுபோன்ற தொற்றுநோய்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாகும். குறிப்பாக, இந்த கொரோனா வைரஸ் மனிதர்கள், விலங்குகள் மற்றும் இந்க பூமியின் ஆரோக்கியத்திற்கு இடையே உள்ள நெருக்கமான தொடர்புகளைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. எனவே, நாம் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான தொடர்பில் உள்ள பிரச்சினை, காலநிலை மாற்ற அச்சுறுத்தல் ஆகியவற்றை முதலில் நிவர்த்தி செய்ய வேண்டும். இல்லையென்றால் மனித ஆரோக்கியத்தை மேம்படுத்த எடுக்கப்படும் எந்தவொரு முயற்சியும் பலனளிக்காது.

புரட்டிப் போட்டுள்ளது
கொரோனா வைரஸ் கடந்த 12 மாதங்களில், நம் உலகைப் புரட்டிப்போட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் நோய் பரவலைத் தாண்டி, சமூக மற்றும் பொருளாதார ரீதியிலான பல நீண்டகால விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன. ஆனாலும்கூட இந்த கொரோனா வைரஸ் நெருக்கடி அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக இருக்கக்கூடாது. ஏனென்றால், இது குறித்து நிறைய எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் நமக்கு பெரும் பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளது.

பொதுச் சுகாதார கட்டமைப்பு
அனைத்து வகையான அவசர நிலைகளையும் தடுக்கவும், கண்டறியவும், தணிக்கவும் அனைத்து நாடுகளும் எப்போதும் ஆயத்தமாக இருக்க வேண்டும். இதற்குத் தேவையான முதலீடுகளை அனைத்து நாடுகளும் மேற்கொள்ள வேண்டும். மேலும், வலுவான ஆரம்பச் சுகாதார அமைப்புகளை நாம் ஏற்படுத்த வேண்டும். பொதுச் சுகாதார கட்டமைப்பில் முதலீடு செய்வதன் மூலம், நமது குழந்தைகள் பாதுகாப்பான மற்றும் நிலையான உலகத்தைப் பெறுவதை நாம் உறுதிப்படுத்த முடியும்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications