நேட்டோ உடன் சேர மாட்டோம்...புடினுடன் நேரடியாக பேசத்தயார் - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு
ரஷ்யா உடன் சமரசத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளதாகவும், அதிபர் புடினுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த தயார் எனவும் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.
கீவ்: நேட்டோ நாடுகளின் உறுப்பினராக சேர்த்துக்கொள்ள உக்ரைன் வலியுறுத்தாது என அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். ரஷ்யா உடன் சமரசத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளதாகவும், அதிபர் புடினுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த தயார் எனவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த 24ஆம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. 15வது நாளாகத் தொடர்ந்து உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் பல நகரங்களில் ரஷ்யா நடத்திய தாக்குதல் காரணமாக உக்ரைன் உருக்குலைந்து போயுள்ளது. பதிலுக்கு உக்ரைனும் தாக்குதல் நடத்துவதால் சேதங்கள் அதிகமாகி வருகின்றன.
திங்கட்கிழமையன்று உக்ரைனின் கார்கிவ் நகரில் உக்ரைன் ராணுவத்துக்கும், ரஷ்ய ராணுவத்துக்கும் இடையே நடந்த தாக்குதலில், ரஷ்ய ராணுவப் படையின் ஜெனரல் மேஜர் விட்டலி ஜெராசிமோவ் உக்ரைன் படையினரால் கொல்லப்பட்டார் என உக்ரைன் ராணுவ புலனாய்வு அமைப்பு அதிகாரபூர்வ தகவல் வெளியிட்டிருக்கிறது.
உக்ரைன் போரால் ரஷ்யாவுக்கு மேலும் சிக்கல்.. எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை.. ஜோ பைடன் அதிரடி..!
ரஷ்யா உக்ரைன் போர்
போரை நிறுத்த மூன்று கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் உக்ரைனின் 5 நகரங்களில் தாக்குதலை ரஷ்யா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. மனிதாபிமான அடிப்படையில் இந்திய மாணவர்களும், உக்ரைன் மக்களும் வெளியேறுவதற்காக தாக்குதல்களை ரஷ்யா நிறுத்தி வைத்துள்ளது. உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நாடற்ற அகதிகளாக புலம் பெயர்ந்துள்ளதாக ஐநா சபை அறிவித்துள்ளது.
ஜெலன்ஸ்கி அறிவிப்பு
இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக இன்ஸ்டாகிராமில் நேற்று வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் பேசிய ஜெலன்ஸ்கி, ``ரஷ்யாவின் படைகள் வடக்கு மற்றும் மேற்கு பகுதியிலிருந்து தலைநகர் கீவை நோக்கி நெருங்கி வருகின்றன. நான் கீவில் பாங்கோவா தெருவில்தான் இருக்கிறேன். எங்கும் ஒளிந்துகொள்ளவில்லை. யாருக்கும் நான் பயப்பட மாட்டேன். தேசத்துக்கான இந்தப் போரில் வெற்றிக்காக நான் என்னால் முடிந்ததைச் செய்வேன்" என்று கூறியிருக்கிறார்.
மேலும் அந்த வீடியோவில், ``ரஷ்யா போரை நிறுத்தி வைத்திருப்பதாகக் கூறிய இடங்களில் உக்ரைனிலிருந்து தப்பிச்செல்ல முயலும் பொதுமக்களை ரஷ்ய ராணுவத்தினர் தாக்கினார்கள்" என ஜெலன்ஸ்கி ரஷ்யா மீது குற்றம் சாட்டியிருந்தார்.
மண்டியிட மாட்டேன்
இதனிடையே தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நேட்டோ நாடுகளின் உறுப்பினராக சேர்த்துக்கொள்ள உக்ரைன் வலியுறுத்தாது என்று கூறியுள்ளார். ரஷ்யா உடன் சமரசத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளதாகவும் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார். நேட்டோ படைகள் உக்ரைனை சேர்த்துக்கொள்ள விரும்பவில்லை என்றும் நேட்டோ நாடுகளிடம் தானம் பெறும் நாடுகளின் தலைவராக இருக்க விரும்பவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். மண்டியிட்டு எதையாவது பிச்சை எடுக்கும் நாட்டின் அதிபராக இருக்க விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.
நேரடியாக பேசத்தயார்
அதிபர் புதினுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த தயார் எனவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவைத்தவிர வேறெந்த நாடும் டோனஸ்க் மற்றும் லூகான்ஸ்க் பகுதிகளைத் தன்னாட்சி பெற்றதாக அறிவிக்கவில்லை என்றும் உக்ரைனின் ஒரு பகுதியாக இருக்கும் மக்கள் தனி நாடாக எப்படி வாழ முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மார்ச் 10ல் பேச்சுவார்த்தை
இந்த நிலையில் ரஷ்ய- உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் வரும் 10 ஆம் தேதி துருக்கியில் சந்தித்துப் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் ட்மிரோ குலேபா மற்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜே லாவ்ரோவ் ஆகியோர் துருக்கியின் கடற்கரை பகுதியான அண்டலியா மாகாணத்தில் சந்தித்துப் பேச ஒப்புக்கொண்டுள்ளனர். இரண்டு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் நேரடியாக சந்தித்துப் பேச உள்ளதால், போர் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
Recommended Video
மோடியின் டெலிபோன் பேச்சு
இந்திய பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்ய அதிபர் புடினுடன் தொலைப்பேசியில் பேசினார். உக்ரைனில் சிக்கித்தவிக்கும் மாணவர்களை மீட்பது குறித்து பேசியதோடு, இரு நாட்டு அதிகாரிகளும் போரை முடிவுக்குக் கொண்டு வர நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவதுதற்கு பாராட்டுக்களைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.