நீ சாகலை தலைவா... இறந்த வேட்பாளரை மேயராகத் தேர்ந்தெடுத்த மக்கள்!
யுரெகுவாரோ: மெக்சிகோ நாட்டில் இறந்து போன நபரை தேர்தல் மூலம் மக்களே மேயராக தேர்ந்தெடுத்த வினோத சம்பவம் நடந்துள்ளது.
சமீபத்தில் மெக்சிகோ நாட்டில் யுரெகுவாரோ நகரில் மேயர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலில் இடதுசாரி அமைப்பான மொரெனா சார்பில் என்ரிக் ஹெர்னான்டஸ் என்பவர் யுரெகுவாரோ நகர மேயர் தேர்தலில் போட்டியிட்டார். என்ரிக் தனது தேர்தல் பிரசாரத்தில், அந்நகரில் செயல்படும் நைட்ஸ் டெம்பிளர் போதை மருந்து கடத்தும் கும்பலிடம் அரசு மண்டியிட்டு கிடப்பதாக குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் கடந்த மாதம் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட என்ரிக், மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக மூன்று போலீசார் கைது செய்யப்பட்டனர்.
எனினும் முன்கூட்டியே திட்டமிட்டப்படி, வாக்காளர்களுக்கு வழங்கப் பட்ட வாக்கு சீட்டில் என்ரிக்கின் பெயர் இடம் பெற்றிருந்தது. அறிவித்தபடி தேர்தலும் நடந்து முடிந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டன.
இதில், யாரும் எதிர்பார்க்காத வகையில் 39 சதவீத வாக்குகள் பெற்று மேயர் தேர்தலில் என்ரிக் வெற்றிபெற்றார்.
இதையடுத்து இறந்த என்ரிக்கிற்கு பதிலாக அவரது தேர்தல் பிரச்சார துணை தலைவர் மார்கோ அன்டோனியோ கோன்சாலெஸ் புதிய மேயராக பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.