தென்னாப்பிரிக்காவை புரட்டிய புயல், வெள்ளத்தில் 341 பேர் பலி.. இரண்டே நாளில் கொட்டிய 6 மாத மழை
கேப்டவுன் : தென்னாப்பிரிக்காவில் 60 ஆண்டுகளில் இல்லாத வகையில் கொட்டித்தீர்த்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 341 ஆக அதிகரித்து உள்ளது.
தென்னாப்பிரிக்காவின் முக்கிய மாகாணங்களான டர்பன் மற்றும் வஜுலு நடாவில் வீசிய அதிவேக புயலால் நகரங்கள் கடும் பாதிப்பை சந்தித்து இருக்கின்றன. அத்துடன் கொட்டித் தீர்த்த பெருமழையால் நீர்நிலைகள் நிரம்பின.
அபாய அளவை தாண்டி நீர்நிலைகளில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

நிலச்சரிவால் பெரும் சேதம்
மலைப்பகுதிகளில் கனமழை வெள்ளம் காரணமாக நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. இதனால் முக்கிய சாலைகள், பாலங்கள், கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்து இருக்கின்றன. ஏராளமான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். பல பகுதிகளில் மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. சாலைகள், பாலங்கள் உடைந்துள்ளதால் உணவுப் பொருட்கள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

மீட்புப் பணிகளில் தொய்வு
இதன் காரணமாக மீட்புப் பணிகளில் ஈடுபடுவதிலும் சிரமம் ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து மீட்புப் படையினர் இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியவர்களை போராடி மீட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட தென் ஆப்பிரிக்கா அதிபர் சிரில் ரமபோசா, மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கவும் உத்தரவிட்டார்.

341 பேர் உயிரிழப்பு
இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண நிதியையும் தென்னாப்பிரிக்க அரசு அறிவித்து உள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருவதாகவும் 250 க்கும் மேற்பட்ட பள்ளிகள் சேதமடைந்து இருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொடர் கனமழை, புயல், வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி முதலில் 20 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது பலி எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து 341 ஆக உள்ளது.

ஆங்காங்கே வெடிக்கும் போராட்டங்கள்
இந்த மழை வெள்ளம் காரணமாக 41 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென்னாப்பிரிக்க அரசு தரப்பில் 17 இடங்களில் தற்காலிக குடியிருப்புகள் அமைக்கப்பட்டு 2,100 பேர் அங்கு இடம்பெயர்த்தப்பட்டு உள்ளனர். இதனிடையே அரசு தரப்பில் வழங்கப்படும் நிவாரண உதவிகள் முறையாக வந்து சேரவில்லை எனக்கூறி பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டங்களையும் முன்னெடுத்து இருக்கின்றனர்.

தென்னாப்பிரிக்காவுக்கு புதிய சவால்
துறைமுக நகரமான டர்பனில் ஒரு ஆண்டு பெய்யும் சராசரி மழை அளவு 1,009 மி.மீ ஆக உள்ளது. ஆனால் வெறும் 48 மணி நேரத்தில் அங்கு 450 மி.மீ. மழை கொட்டித்தீர்த்து இருப்பதே இந்த பெரும் சேதத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. கொரோனா பெருந்தொற்று காரணமாகவும், பெரும் கலவரத்தாலும் பாதிக்கப்பட்டு சற்று இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்காவுக்கு இந்த புயல், வெள்ளம் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications