21 கிறிஸ்தவர்கள் தலை துண்டிக்கப்பட்டதன் எதிரொலி- ஐஎஸ்ஐஎஸ் மீது எகிப்து கடும் தாக்குதல்
கெய்ரோ: 21 கிறிஸ்தவர்கள் தலை துண்டிக்கப்பட்டதன் எதிரொலியாக எகிப்து ராணுவம் லிபியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். நிலைகள் மீது வான்வெளித் தாக்குதல் நடத்தியுள்ளது.
லிபியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் எகிப்தைச் சேர்ந்த 21 கிறிஸ்தவர்களை வரிசையாக நிற்க வைத்து தலையை துண்டித்து அதை வீடியோ எடுத்து வெளியிட்டனர். இந்த சம்பவத்திற்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. போப் பிரான்சிஸும் 21 கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டதை அறிந்து தான் பெருந்துயரம் உற்றதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் 21 பேர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்க எகிப்து ராணுவம் லிபியாவின் தெர்னா நகரில் இருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் முகாம்கள், பயிற்சி மையங்கள், ஆயுத கிடங்குகள் மீது வான்வெளித் தாக்குதல் நடத்தியது.
தீரிவாதிகளின் பிடியில் உள்ள தெர்னா நகரில் தான் எகிப்து ராணுவம் தாக்குதல் நடத்தியது என்று லிபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்ட 21 பேரும் வேலை தேடி லிபியா சென்றபோது தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர்.
தீவிரவாதிகள் அவர்களை கடற்கரையில் மண்டியிட வைத்து தலையை துண்டித்து அதை வீடியோ எடுத்து ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டனர். இதையடுத்து திங்கட்கிழமை எகிப்து ராணுவம் தீவிரவாதிகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. எகிப்து ராணுவத்துடன் சேர்ந்து லிபிய ராணுவமும் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் எகிப்து நாட்டு தொலைக்காட்சியில் திங்கட்கிழமை ஒளிபரப்பானது.
முன்னதாக ஜோர்டான் விமானியை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கடத்தி எரித்துக் கொன்றனர். இதையடுத்து தீவிரவாதிகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்திய ஜோர்டான் அவர்களை அழிக்கும் வரை ஓய மாட்டோம் என்று தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.