அந்த ஊர்ல பாருங்க, வெள்ளம்னா பிரதமரே நடந்து போகிறார்.. இங்கோ??
லண்டன்: சென்னையை எப்படி ஒரு பெருவெள்ளம் உருட்டி புரட்டி எடுத்ததோ அதேபோன்ற ஒரு பெரு வெள்ளம் தற்போது இங்கிலாந்தை பாடாய்ப்படுத்தி வருகிறது.
வடக்கு இங்கிலாந்தில் மிகப் பெரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பல குடியிருப்புகள் நீரில் மூழ்கியுள்ளன. வீடுகள், வர்த்தக நிறுவனங்களில் வெள்ளம் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. பல ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். யார்க் நகரம் மிகப் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. நான்கு நாட்களுக்கும் மேலாக அது நீரில் மூழ்கிக் கிடக்கிறது.
தற்போது இங்கிலாந்தை பிராங்க் என்ற புதிய புயல் அச்சுறுத்தி வருகிறது. இந்த புயல் காரணமாக மணிக்கு 80 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. இந்த புயல் பெரும் பாதிப்பை உண்டு பண்ணும் என்று நாசா எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் பிரதமர் டேவிட் கேமரூன் நேரில் சென்று பார்வையிட்டு மக்களைச் சந்தித்து வருகிறார். வெள்ள நீரில் அவர் நடந்து சென்று பார்வையிடுவது குறிப்பிடத்தக்கது. நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை நேரில் பார்வையிட்டுள்ளார்.
சென்னையிலும்தான் வெள்ளம் வந்தது. முதல்வர் தனது வீட்டை விட்டு வரவே இல்லை. கடும் விமர்சனத்துக்குப் பிறகு ஒப்புக்கு ஆர். கே.நகர் பக்கம் போய் வந்தார். பிறகு பிரதமர் வருகிறார் என்று தகவல் வெளியானதும்தான் அவசரம் அவசரமாக ஹெலிகாப்டரைப் பிடித்து வானில் ஒரு ரவுண்டு அடித்து விட்டு வீட்டுக்குப் போய் விட்டார்.
இங்கிலாந்து வெள்ளத்தையும், டேவிட் கேமரூன் வெள்ள நீரில் நடந்து சென்று பார்வையிடுவதையும் இங்கு காணலாம்: