ஹேப்பி பர்த்டே ஃபேஸ்புக்: பூஜ்ஜியத்தில் தொடங்கி கோடியில் புரளும் மார்க் ஜுகர்பெர்க்
வாஷிங்டன்: சமூக வலைத்தளத்தில் வல்லரசாக வலம் வரும் "பேஸ்புக்" தனது 10-வது பிறந்த நாளை பிப்ரவரி 4ம் தேதி செவ்வாய்கிழமையான இன்று கொண்டாடுகிறது.
பல்கலைக்கழக மாணவர்களை இணைப்பதற்காக தொடங்கப்பட்ட இந்த சமூக வலைத்தளம் இன்றைக்கு 1.23 பில்லியன் மக்களை ஒருங்கிணைத்துள்ளது.
மாணவராய் பூஜ்ஜியத்தில் தொடங்கிய ஃபேஸ்புக் உரிமையாளர் மார்க் ஜுகர்பெர்க் இன்றைக்கு கோடிகளில் புரள்கிறார். தன்னுடைய எண்ணங்களை பரிமாறிக்கொள்ளும் தளமாக இன்றைக்கு ஃபேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர் பலரும்.
2004 பிப்ரவரி 4…
அமெரிக்காவைச் சேர்ந்த மார்க் ஜுகர்பெர்க் தனது சக நண்பர்களுடன் சேர்ந்து ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஒரு சிறிய அறையில் 2004-ம் ஆண்டு பிப்ரவரி 4-ம் தேதி பேஸ்புக் இணையதளத்தைத் தொடங்கினார்.
மாணவர்களை இணைக்க
அப்போது பல்கலைக்கழக மாணவராக இருந்த மார்க், சக மாணவர்களுக்கிடையே ஓர் இணைப்பை ஏற்படுத்த இந்த இணையதளத்தை உருவாக்கினார்.
123 பில்லியன்
இப்போது பேஸ்புக் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை 120 கோடியைத் தாண்டிவிட்டது. கடந்த 2012-ம் ஆண்டில் பேஸ்புக் கின் ஆண்டு நிகர வருமானம் 53 மில்லியன் டாலராக இருந்தது.
2013-ம் ஆண்டில் அதன் வருவாய் இருமடங்கு அதிகரித்து 1.5 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
ஃபேஸ்புக் பயன்படுத்துவோர்
அடுத்த 3 ஆண்டுகளில் பேஸ்புக்கை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 80 சதவீதம் குறைந்துவிடும் என்று பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
நினைத்தே பார்க்கவில்லை...
பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க் கடந்த மே மாதம் தனது 30-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அப்போது பேசிய அவர், இந்த இணையதளம் உலக கோடீஸ்வரர்களில் ஒருவராக என்னை உயர்த்தும் என்று கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை என்று தெரிவித்தார்.
கோடி கோடியாய்...
ஃபேஸ்புக் சமூக வலைத்தளம் இன்றைக்கு பத்தாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. பூஜ்ஜியத்தில் தொடங்கிய பேஸ்புக்கின் வருவாய் இப்போது கோடி கோடியாய் கொட்டிக் கொண்டிருக்கிறது.