சமூக ஊடகங்களில் உண்மையைவிட பொய் வேகமாகப் பரவுகிறது: ஆய்வில் தகவல்
பொய்ச் செய்திகள் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவுவதாக புதிய ஆய்வு கூறுகின்றது.
வாஷிங்டன்: சமூக ஊடகங்களில் உண்மையான செய்திகளைவிட பொய்ச் செய்திகள் வேகமாகப் பரவுவதாக அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது.
செல்போனில் உலகம் சுருங்கி விட்ட நிலையில், சமூக ஊடகங்கள் வாயிலாக எந்தவொரு செய்தியும் நொடியில் உலகம் முழுவதும் பரவி விடுகிறது. இதனை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் விஷமிகள், சமயங்களில் உண்மையைத் திரித்து பொய்ச்செய்திகளைப் பரப்பி விடுகின்றனர்.

ஆனால், உண்மைச் செய்திகளைவிட பொய்யானவை சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி விடுகிறதாம். இது குறித்து அமெரிக்காவில் உள்ள மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இதற்காக 2016-17 ஆண்டு என இரண்டு ஆண்டுகளில் 1,26,000 பேரின் டிவிட்கள் கண்காணிக்கப்பட்டன.
இந்த ஆய்வின் முடிவில், உண்மையைவிட பொய்ச் செய்திகள் 70 சதவீதம் அதிகமாகப் பகிரப்படுகின்றன என்பது தெரிய வந்துள்ளது. அதாவது, ஒரு உண்மையான செய்தி பகிரப்படும் நேரத்தில் 6 பொய்யான செய்திகள் பரவிவிடுகின்றன.
இதற்கு முக்கியக் காரணம் மக்கள் புதிய மற்றும் வித்தியாசமான செய்திகளை விரும்புவதே ஆகும் என இந்த ஆய்வு கூறுகிறது. இதனால், பொய்யான செய்திகளால் ஆர்வமடைந்து, அதன் உண்மைத்தன்மையை ஆராயாமல் மக்கள் அதனை பகிர்ந்து விடுகின்றனர் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது போன்ற பொய்யான செய்திகள் நாட்டில் முக்கிய நிகழ்வுகள் குறிப்பாக தேர்தல் நடைபெறும் போது வெளிவருவதாக இந்த ஆய்வு கூறுகின்றது.
இது போன்ற பொய்யான செய்திகள் பரவுவதை தடுக்க, சமீபத்தில் டிவிட்டர் நிறுவனம் பல புதிய நிபந்தனைகளைக் கொண்டு வந்தது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications