தனி விமானம் மூலம் கோலாலம்பூர் வந்த எம்.ஹெச். 17 மலேசிய பயணிகளின் உடல்கள்
கோலாலம்பூர்: உக்ரைனில் சுட்டுத் தள்ளப்பட்ட மலேசிய விமானத்தில் இருந்த மலேசியாவைச் சேர்ந்த 20 பேரின் உடல்கள் இன்று கோலாலம்பூர் வந்தடைந்தது.
கடந்த மாதம் 17ம் தேதி நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17 கிழக்கு உக்ரைனில் ரஷ்ய எல்லை அருகே ஏவுகணை வீசித் தாக்கப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 298 பேர் உடல் சிதறி பலியாகினர்.
அவர்களின் உடல்கள் உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவு புரட்சிப்படையின் பிடியில் உள்ள பகுதியில் விழுந்தது. இந்நிலையில் பலியான 43 மலேசியர்களில் 20 பேர்களின் உடல்கள் தனி விமானம் மூலம் கோலாலம்பூர் விமான நிலையத்தை இன்று வந்தடைந்தது.
உடல்கள் இருந்த சவப்பெட்டிகள் மீது மலேசிய கொடி போர்த்தப்பட்டது. அந்த பெட்டிகளை விமான நிலையத்தில் கூடியிருந்த ராணுவ வீர்கள் வாகனங்களுக்கு எடுத்துச் சென்றனர்.
ஏற்கனவே 239 பேருடன் மலேசிய விமானம் மாயமான சோகத்தில் இருந்த மலேசிய மக்களுக்கு உக்ரைனில் இந்த விமானம் தாக்கப்பட்டது பேரதிர்ச்சியை அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
விமானம் விழுந்த இடத்தில் உக்ரைன் அரசுக்கும், ரஷ்ய ஆதரவு புரட்சிப்படைக்கும் இடையே மோதல் நடப்பதால் பயணிகளின் உடல்களை தேடும் பணி கைவிடப்பட்டுள்ளது.