"துண்டாக" விழுந்த கைகள்.. சுற்றிலும் எல்லாரும் நிற்க.. மைதானத்தில் அலறிய 9 பேர்.. தாலிபன்கள் ஷாக்கிங்
4 பேரின் கைகளை துண்டாக வெட்டியதுடன், 9 பேருக்கு கசையடி தந்துள்ளனர் ஆப்கன்கள்
காபூல்: 4 பேரின் கைகளை துண்டாக தாலிபன்கள் வெட்டிய நிலையில், அதுகுறித்த கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகின்றன.
தாலிபான் ஆட்சியில் ஆப்கானிஸ்தான் பெண்களின் உரிமைகள் தொடர்ந்து மீறப்பட்டு வரும் நிலையில், பெண்கள் பல்கலைக்கழகங்களில் இருந்தும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணியாற்றுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு இந்தியா உட்பட உலக நாடுகள் கவலை தெரிவித்து வருகின்றன.. தங்கள் தடை உத்தரவுக்கு சர்வதேச அரங்கில் கடும் எதிர்ப்பு வந்துள்ள நிலையில், தடைக்கான காரணம் குறித்து தாலிபான் விளக்கம் அளித்திருந்தது..
ஆப்கன் பெண்கள் இனி ஆண் மருத்துவரை பார்க்கக்கூடாது.. தலிபான்கள் ஆட்டம்.. ஆனா
ஆவேச எழுச்சி
ஆனால், இந்த விளக்கத்தை கண்டு, ஆப்கன் பெண்கள் மேலும் கொந்தளித்து விட்டார்கள்.. இதற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாது என்று பெண்கள், ஆவேசம் அடைந்துள்ளனர்.. தாலிபன் அரசின் இந்த முடிவை எதிர்த்து மாணவிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள்.. பெண்களை மறுபடியும் கல்லூரிகளில், பல்கலையில் அனுமதிக்கப்படும்வரை, தாங்களும் வகுப்புகளுக்குள் செல்ல மாட்டோம் என்று மாணவர்கள் ஒன்றுசேர்ந்து முடிவெடுத்துள்ளனர். மாணவர்களின் இந்தப் போராட்டத்தால் ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களை மூடும் சூழல் உருவாகியுள்ளது.
டாக்டர்ஸ்
பெண்களின் உரிமைகள் தொடர்ந்து மீறப்பட்டுவரும் நிலையில், பெண்கள் தங்கள் சிகிச்சைக்காக, ஆண் டாக்டரை அணுகக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு கல்வி கற்க உரிமை மறுக்கப்பட்டிருப்பதால் பெண் டாக்டர்களும் அங்கு உருவாகாத சூழல் நிலவி வருகிறது. மேலும், பெண்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படமாட்டாது என்று தாலிபான்கள் திட்டவட்டமாக 4 நாட்களுக்கு முன்பு அறிவித்தும் விட்டனர்.. ஒருபக்கம் உரிமைகள் பறிப்பு மற்றொருபக்கம் உயிர்கள் சித்ரவதை என தாலிபன்கள் அட்டகாசம் செய்து வருவதாக சொல்லப்படுகிறது..
கரங்கள்
அந்தவகையில், இன்னொரு அதிர்ச்சி சம்பவம் தற்போது நடந்துள்ளது.. ஆப்கானிஸ்தானின் முன்னாள் அமைச்சரின் ஆலோசகரான ஷபானா நசிமி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிரவைக்கும் ஒரு தகவலை பதிவிட்டுள்ளார்.. அதில், "காந்தஹார் கால்பந்து மைதானத்தில் பொதுமக்கள் முன்னிலையில் திருட்டில் ஈடுபட்டு கைதான 4 பேரின் கரங்கள் துண்டிக்கப்பட்டன" என்று தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் மக்களுக்கு கசையடி, கை, கால் துண்டிப்பது, உயிரை எடுப்பது போன்ற கொடூர தண்டனைகள் தலிபான்கள் கட்டவிழ்த்துவிடுகின்றனர் என்றும் அவர் அதில் வேதனையுடன் சுட்டிக் காட்டியுள்ளார்.
துண்டான கைகள்
இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை உலக நாடுகளில் ஏற்படுத்தி வருகிறது.. இப்போது இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது.. கைகள் துண்டிக்கப்பட்ட அதே காந்தஹாரில் உள்ள அகமது சாஹி கால்பந்து மைதானத்தில், தலிபான்கள் திருட்டில் ஈடுபட்டதாக 9 பேருக்கு கசையடி கொடுக்கப்பட்டதாம்.. இது தொடர்பாக அந்த சுப்ரீம்கோர்ட்டும் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது... காந்தஹார் மாகாண மக்கள் முன்னிலையில் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் ஒவ்வொரு குற்றவாளிக்கும் 35 முதல் 39 கசையடிகள் வழங்கப்பட்டன என்றும் மாநில ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் ஹாஜி ஜெய்த் கூறியுள்ளார்.
கைகள் துண்டிப்பு
அதாவது, திருட்டு உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட 9 பேரை அழைத்து வரப்பட்ட நிலையில், அவர்களுக்கு 35 முதல் 39 முறை கசையடி அளிக்கப்பட்டது. அதற்கு பிறகுதான், திருட்டு குற்றத்துக்காக 4 பேரின் கைகளை வெட்டி துண்டிக்கப்பட்டுள்ளதாம்.. இப்படித்தான், கடந்த மாதமும் பெண்களுக்கு தண்டனை தரப்பட்டது.. லோகர் மாகாணத்தின் பல் ஆலம் நகரில், ஒரு பெரிய மைதானத்தில் நூற்றுக்கணக்கான ஆண்கள் கூடிநிற்க, அவர்கள் முன்னிலையில் 3 பெண்கள் உள்பட 12 பேருக்கு தாலிபான்கள் கசையடி தண்டனை கொடுத்தனர்..
பெரிய மைதானம்
இந்த 12 பேரும், திருட்டு மற்றும் பாலியல் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டதாக, கோர்ட்டில் நிரூபணமானவர்கள்.. பரந்து விரிந்த அந்த மைதானத்திற்கு, 12 குற்றவாளிகளும் அழைத்து வரப்பட்டனர்.. நூற்றுக்கணக்கான ஆண்கள் அங்கு குவிந்திருந்தனர்.. குற்றஞ்சாட்டப்பட்ட 3 பெண்கள் உள்பட 12 பேரையும் மைதானத்தில் மையப்பகுதியில் நிறுத்தப்பட்டனர். அங்கு குற்றத்தின் அடிப்படையில் 12 பேருக்கும் 21 முதல் 39 கசையடிகள் தண்டனையாக வழங்கினர்.. இஸ்லாமிய சட்டமான ஷரியா சட்டத்தை அமல்படுத்தி கடுமையான தண்டனைகள் விதித்து வரும் நிலையில், இந்த தண்டனையும் தற்போது அரங்கேறி உள்ளது.
கசையடிகள்
இவர்களுக்கு தண்டனை தருவதை நேரில் பார்க்க வேண்டும் என்பதற்காகவே, ட்விட்டர், பேஸ்புக்குகளில் அழைப்பு விடுக்கப்பட்டு, அதன்பேரில் பலபேரை மைதானத்தில் திரட்டியிருந்தனர். அதேபோல 10 நாட்களுக்கு முன்புகூட, கொலை குற்றம் சாட்டப்பட்ட நபர், பொது இடத்தில் தூக்கிலிடப்பட்டு மரண தண்டனையை நிறைவேற்றினார்கள் தாலிபன்கள்.. சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளும், கண்டனங்களும் இருந்தபோதிலும், தாலிபான்கள் மறுபடியும் கசையடி மற்றும் குற்றவாளிகளை பகிரங்கமாக தூக்கிலிடவும் ஆரம்பித்துள்ளனர்.
கசையடி
ஆப்கானிஸ்தானில் பொது மரணதண்டனை மற்றும் கசையடி மறுபடியும் தொடங்கியுள்ளது ஐநா நிபுணர்களை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தி வருகிறது.. மேலும், அனைத்து வகையான கடுமையான, கொடூரமான மற்றும் இரக்கமற்ற தண்டனைகளை உடனடியாக நிறுத்துமாறு அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.. ஏற்கனவே, ஆப்கானிஸ்தான் வேலையின்மை, பசி, பட்டினி, நோய், குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் தவிப்பு, தொற்று நோய் பரவல் என பல பிரச்சினைகள் தலைவிரித்தாடி வரும்நிலையில், மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியும் அங்கு ஏற்பட்டு வருவதாக உலக நாடுகள் கவலை தெரிவித்து வருகின்றன..!!