30 நாடுகள் ஆதரவு: ஈராக் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்க நிலைகள் மீது அமெரிக்கா சரமாரி வான் தாக்குதல்!
பாக்தாத்: ஈராக்கின் பாக்தாத் அருகே ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தினர் நிலைகள் மீது அமெரிக்கா இன்று சரமாரி வான் தாக்குதலை நடத்தியது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு 30 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஈராக், சிரியா நாடுகளில் பெரும் பகுதியை கைப்பற்றி இஸ்லாமிய தேசம் என்ற புதிய நாட்டை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் உருவாக்கியுள்ளனர். அவர்களை ஒழிக்க வான் தாக்குதல் நடத்தும் அமெரிக்கா, அதற்கு உதவும் இங்கிலாந்து ஆகிய நாடுகளை மிரட்ட தங்களிடம் பிணைக் கைதிகளாக பிடிபட்ட அந்நாட்டவர்களின் தலையை துண்டித்து படுகொலை செய்து வருகின்றனர்.
இதுவரை படுகொலை
அமெரிக்காவின் ஜேம்ஸ் போலி, ஸ்டீவன் சாட்லாப், இங்கிலாந்து சமூக சேவகர் டேவிட் கெயின்ஸ் ஆகியோரை படுகொலை செய்துள்ளனர். அத்துடன் இத்தகைய படுகொலைகள் தொடரும் என அறிவித்துள்ளனர்.
30 நாடுகள் ஆதரவு
இதனால் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தை ஒழிக்க அமெரிக்கா, இங்கிலாந்து, பிரானஸ் உள்ளிட்ட நாடுகள் கை கோர்த்துள்ளன. ரஷியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் எகிப்து, ஈராக், ஜோர்டன், லெபனான் மற்றும் 6 அரபுநாடுகள் உள்ளிட்ட 30 நாடுகள் அமெரிக்காவின் தாக்குதல் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
உக்கிர தாக்குதல்
இதை தொடர்ந்து ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மீதான குண்டு வீச்சை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது. முன்பு ஈராக்கில் முகாமிட்டிருக்கும் அமெரிக்க படைகளை பாதுகாக்கவும், சிறுபான்மை மக்களை மனிதாபமான முறையில் காக்கவும் தீவிரவாதிகள் மீது குண்டு வீச்சு நடத்துவதாக அறிவித்தது.
ஈராக் படைகளுக்கு ஆதரவாக..
தற்போது தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தும் ஈராக் படைகளுக்கு ஆதரவாக தனது தாக்குதலை விரிவுபடுத்தி தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த 2 நாட்களாக தென்மேற்கு பாக்நாத், சிஞ்சார் மலை பகுதி ஆகிய இடங்களில் தீவிரவாதிகள் நிலைகள் மீது சரமாரி குண்டு வீச்சு நடத்தியது.