போர்ப்ஸின் ”யங் பிசினஸ் மேன்ஸ்” பட்டியல்- இந்தியாவின் 45 இளம் தொழிலதிபர்களுக்கு இடம்!
நியூயார்க்: நியூயார்க்கிலிருந்து வெளிவருகின்ற போர்ப்ஸ் பத்திரிக்கை 30 வயதுக்குள் சாதனை படைத்த 45 இந்திய தொழில் அதிபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
சர்வதேச அளவில் 30 வயதுக்குள் சாதனை படைத்த இளம் தொழில் அதிபர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியர்களும், இந்திய வம்சாவளியினருமாக 45 தொழில் அதிபர்கள் இடம் பெற்றுள்ளனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த வணிக பத்திரிகையான போர்ப்ஸ் நுகர்வோர், கல்வி, ஊடகம், உற்பத்தி, தொழில், சட்டம் மற்றும் கொள்கை, சமூக நிறுவனர்கள், அறிவியல், கலை மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளில் சாதனை படைத்து வரும் இளம் தொழில் அதிபர்கள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.
இந்தியாவின் தொழிலதிபர்கள்:
தற்போது ஐந்தாவது ஆண்டாக அந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் வணிக துறையில் சாதனை படைத்த கிட்டதட்ட 600 ஆண்கள் மற்றும் பெண்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருமே 30 வயதுக்கும் குறைவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் இந்தியா மற்றும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட 45 இளம் தொழிலதிபர்கள் உள்ளனர்.
22 வயதான ரித்தேஷ் அகர்வால்:
இப்பட்டியலில் ஓயோ ரூம்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், நிறுவனருமான ரித்தேஷ் அகர்வால் இடம் பிடித்துள்ளார். இவருக்கு வயது 22. இவர் இந்தியாவில் 100 நகரங்களில் 2,200 சிறிய ஓட்டல்களை நிர்வகித்து வருவதற்காக இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். ககன் பியானி, நீரஜ் பெர்ரி, கரிஷ்மா ஷா ஆகியோரும் இந்த துறையில் சாதனை படைத்து இப்பட்டியலில் இணைந்துள்ளனர்.
மற்ற துறை சாதனையாளர்கள்:
பொழுதுபோக்கு துறையில் லில்லி சிங், வங்கித் துறையில் நீலாதாஸ், முதலீட்டு ஆலோசனை துறையில் திவ்யா நெட்டிமி, விகாஸ் பட்டேல், நீல் ராய் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். துணிகர முதலீட்டுப் பிரிவில், இந்திய வம்சாவளியினரான விஷால் லுகானி, அமித் முகர்ஜி ஆகியோர் உள்ளனர்.
45 இளம் இந்திய தொழிலதிபர்கள்
ஊடக துறையில் இருந்து 27 வயதான நிஷா சிட்டால், ஆஷிஷ் பட்டேல் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். உற்பத்தி துறையில் இருந்து சம்பிரிதி பட்டாச்சார்யா, சாகர் கோவில் உள்ளனர். சமூக நிறுவனர்கள் துறையில் அனூப் ஜெயின் சட்டம் மற்றும் கொள்கை துறையில் ஆஷிஷ் கும்பத், திபயன் கோஷ் , அனிஷா சிங் உள்ளனர். அறிவியல் துறையில் இருந்து சஞ்சம் கார்க் இடம் பெற்றுள்ளார். மொத்தத்தில் 45 இளம் இந்திய தொழிலதிபர்கள் போர்ப்ஸ் பத்திரிகையின் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.