சீன பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் படுகொலை .. வெளிநாட்டு மாணவர் ஒருவர் கைது.. வெளியான பரபர தகவல்
பெய்ஜிங்: சீனாவின் தியான்ஜின் நகரிலுள்ள பல்கலைக்கழகத்தில் 20 வயதான இந்திய மாணவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் வெளிநாட்டு மாணவர் ஒருவரைக் கைது செய்து விசாரித்து வருவதாகச் சீன போலீசார் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் சீனாவில் தங்கள் கல்லூரி படிப்பை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக இந்தியாவில் இருந்து மட்டும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் சீனாவில் படித்து வந்தனர்.
இருப்பினும், கடந்த 2019 இறுதியில் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்குப் படித்து வந்த பெரும்பாலான இந்திய மாணவர்கள் நாடு திரும்பிவிட்டனர். தற்போது வெகு சில இந்திய மாணவர்கள் மட்டுமே சீனாவில் தங்கியுள்ளனர்.

இந்தியா மாணவர் மரணம்
இந்நிலையில், சீன தலைநகர் பெய்ஜிங் நகருக்கு 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தியான்ஜின் என்ற நகரில் அமைந்துள்ள தியான்ஜின் வெளிநாட்டு ஆய்வு பல்கலைக்கழகத்தில் 20 வயதான இந்திய மாணவர் ஒருவர் கடந்த வாரம் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. கொலை செய்யப்பட்ட மாணவர் பீகார் மாநிலத்தின் கயா பகுதியைச் சேர்ந்த அமன் நாக்சென் என்பதும் அவர் அங்கு வணிக பிரிவில் படித்து வந்ததும் தெரியவந்தது.

கொலை
முதலில் அவர் எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து தெளிவான தகவல் எதுவும் வெளியாகாமலேயே இருந்தது. இந்நிலையில், முதற்கட்ட விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டதை போலீசார் உறுதி செய்தனர். மேலும், கூர்மையான ஆயுதம் ஒன்றைக் கொண்டே அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. சீனாவிலுள்ள பல்கலைக்கழகங்களில் இதுபோன்ற குற்றங்கள் மிகவும் அரிதாகவே நடைபெறும் என்பதால் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

வெளிநாட்டு மாணவர் கைது
இந்நிலையில், இந்த கொலை சம்பவம் தொடர்பாக அதே பல்கலைக்கழகத்தில் படிக்கும் மற்றொரு வெளிநாட்டு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளதாகச் சீன அதிகாரிகள் தெரிவித்தனர். அவரிடம் தற்போது சீன போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம் அவர் எந்த நாட்டை சேர்ந்தவர், ஏன் கொலை செய்தார், அதற்கு அவர் பயன்படுத்திய ஆயுதம் கைப்பற்றப்பட்டதா போன்ற தகவல்களைச் சீன ராணுவம் வெளியிடவில்லை.

சீனா விளக்கம்
இந்தச் சம்பவம் தொடர்பாகச் சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த ஜூலை 29 இரவு 8 மணிக்கு தியான்ஜின் பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.முதற்கட்ட விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக் கண்டறியப்பட்டது, இது தொடர்பாக அதே பல்கலைக்கழகத்தில் படிக்கும் மற்றொரு வெளிநாட்டு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடற்கூராய்வு முடிந்து இந்த வாரம் அந்த மாணவரது உடல் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் சீன தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications