கல்லூரி நிறுவனர் உள்பட பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய 4 பேர் பாகிஸ்தானில் கைது
கராச்சி: பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக கல்லூரி நிறுவனர் உள்பட 4 பேர் கராச்சியில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக, கராச்சி காவல் துறையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் தலைவர் ராஜாஉமர் கத்தாப் கூறுகையில், பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்த சதி செய்தது, நிதி உதவி அளித்தது, தாக்குதல் நடத்தியவர்களை மூளைச் சலவை செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அடிப்படையில் ஆதில் மசூத் பட், காலீத் யூசுப் பாரி, சலீம் அகமது, முகமது சுலைமான் சயீத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதில் ஆதில் மசூத் பட், கராச்சியில் பள்ளிக் கல்வி முடித்து, இரு அமெரிக்க பல்கலைக்கழகங்களில் மேற்கல்வி பயின்றவர். பாகிஸ்தான் திரும்பிய அவர், கராச்சியில் வணிகக் கல்விக்கான கல்லூரியை நிறுவி நடத்தி வருகிறார்.
கைதான மற்றொருவர் பாகிஸ்தான் அரசு விமான நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றியவர். கைது செய்யப்பட்ட இரு நபர்களின் மனைவிகளும் பெண்களிடையே பயங்கரவாதிகளுக்கு ஆதரவும் நிதியும் திரட்டி வந்தனர்.
காலீத் யூசுப் பாரியின் மனைவி நடத்தி வந்த கல்வி நிலையம் மூலம் செல்வாக்கு மிகுந்த பெண்களிடையே பயங்கரவாதிகளுக்கு ஆதரவும் நிதியும் திரட்டினார். கல்வி நிலையங்கள் மூலம் பயங்கரவாதிகள் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்தி வந்தனர் என்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, சிந்து மாகாணத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் கூர்மையாகக் கண்காணித்து வருகிறோம் என அவர் தெரிவித்தார்.