தோல் செல்களை ஸ்டெம் செல்களாக மாற்றி... மூளைக்கட்டிகளுக்கு புதிய சிகிச்சை முறை!
வாஷிங்டன்: மூளைக் கட்டிகளுக்கான சிகிச்சை முறையில் புதிய உத்தி ஒன்றை வடக்கு கரோலினா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அதாவது தோல் செல்களை, ஸ்டெம் செல்களாக மாற்றி, அதை புற்றுநோய்க்கு எதிரான மருந்துகளில் கலந்து அதன் மூலம் சிகிச்சை அளிக்கும் முறையாகும் இது.
இந்த ஆய்வை எலியில் வைத்து ஆய்வுக்குழுவைச் சேர்ந்த ஆய்வு மாணவர்கள் நிகழ்த்தியுள்ளனர்.
ஸ்டெம் செல் ஆய்வு...
இந்த ஆய்வுக்கு டாக்டர் ஸான் ஹிங்ட்ஜென் உறுதுணையாக உள்ளார். இவர் ஏற்கனவே புற்று நோய் தொடர்பான ஸ்டெம் செல் ஆய்வில் ஈடுபட்டிருப்பவர் ஆவார்.
போர் தீவிரம்...
கிளிபிளாஸ்டோமா எனப்படும் மூளைக் கட்டிக்கு எதிரான போர் போல இந்த ஆய்வை மாணவ ஆய்வாளர்கள் கருதி தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
ஆயுள்காலம்...
இதுகுறித்து ஸான் கூறுகையில், ‘தற்போது மூளைக் கட்டி வந்த நோயாளிகளின் ஆயுள்காலம் 12 முதல் 15 மாதங்கள்தான். கடந்த 30 வருடங்களாக இதே நிலைதான் நீடிக்கிறது. எனவே இதற்கு முடிவு கட்ட வேண்டியது அவசியமாகிறது.
புதிய சிகிச்சை முறை...
தற்போது உள்ள சிகிச்சை முறைகள் பலன் தருவதாக இல்லை. எனவே புதிய முறை தேவைப்படுகிறது. அதுதொடர்பான ஆய்வைத்தான் வடக்கு கரோலினா பல்கலைக்கழக மாணவ ஆய்வுக் குழு மேற்கொண்டுள்ளது' என்றார்.
தோல் செல்களை...
இந்த ஆய்வின் கீழ் தோலில் உள்ள செல்களை எடுத்து ஸ்டெம் செல்களாக மாற்றி, அதை புற்றுநோய் கட்டிகளுக்கு எதிரான மருந்தில் கலந்து செலுத்துவது குறித்து ஆய்வு நடந்து வருகிறது.
பாதிப்பு குறையும்...
இப்படி செலுத்தப்படும் மருந்தானது, புற்றுநோய்க் கட்டிகளின் வீரியத்தைக் குறைத்து ஆயுட்காலத்தைக் கூட்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மேலும் புற்றநோயால் பாதிக்கப்பட்ட மூளை செல்கள் மீண்டும் வளரவும் இந்த ஸ்டெம் செல் மருந்து உதவுகிறது. இதனால் மூளை பாதிப்பு குறையும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
ஆய்வில் முன்னேற்றம்...
இந்த ஆய்வு தற்போது தொடக்க நிலையில் இருந்தாலும் கூட முன்னேற்றம் தெரிவதாக டாக்டர் ஸான் கூறுகிறார்.