அமெரிக்க ராணுவத்திடம் அதி நவீன பயிற்சி பெற்ற ஆப்கன் படைகள்.. தாலிபான்களிடம் தோற்றது ஏன் தெரியுமா?
காபூல்: அமெரிக்காவால் 83 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் 20 வருடங்களாக உருவாக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது ஆப்கானிஸ்தான் ராணுவம். ஆனால் தாலிபான்கள் முன்பாக முற்றிலுமாக தோல்வியடைந்து ஒடுங்கியுள்ளது.
Recommended Video
சில பகுதிகளில் துப்பாக்கியிலிருந்து ஒரு குண்டு கூட வெளியேறாமல் அப்படியே தாலிபான்களிடம் சரண் அடைந்துள்ளது ஆப்கானிஸ்தான் ராணுவம்.
ஆப்கானிஸ்தான் மட்டுமல்ல, அமெரிக்கா வழங்கிய சக்தி வாய்ந்த துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், ஹெலிகாப்டர்கள் போன்றவையும் இப்போது தாலிபான்கள் வசமாகி உள்ளன.

சரணடைந்த ஆப்கன் ராணுவம்
இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், அமெரிக்கப் படைகள் வழங்கிய நிறைய ஆயுதங்கள் இப்போது தாலிபான்கள் கைக்குச் சென்றுள்ளன. சண்டை போடாமல் இந்த ஆயுதங்களை தாலிபான்கள் இடம் கொடுத்துவிட்டு ஆப்கானிஸ்தான் ராணுவம் சரண் அடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தோல்வி
ஒரு நிலையான ஆப்கானிஸ்தான் ராணுவத்தை மற்றும் போலீஸ் படையை உருவாக்குவதில் அமெரிக்கா தோல்வி அடைந்திருக்கிறது. இது அமெரிக்க ராணுவத்தால் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று பெண்டகன் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. ஈராக் நாட்டில் நடைபெற்றது போலல்லாமல் ஆப்கானிஸ்தானில் எதிரிகள் முன்னேறுவதற்கு காரணம் ஆள்பவர்களிடம் போதிய முனைப்பு இல்லாததுதான் என்கிறார்கள் சில அரசியல் பார்வையாளர்கள்.

பணத்தை வைத்து வீரத்தை வாங்க முடியாது
பணத்தை கொட்டி கொடுக்கலாம், ஆனால் அது தன்முனைப்பை வாங்கி விட முடியாது, தலைமைப் பண்பையும் பணத்தை வைத்து வாங்கிவிட முடியாது என்கிறார் லாயிட் ஆஸ்டினின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி.

ஆப்கானிஸ்தான் ராணுவம் தோற்க காரணம்
ஜார்ஜ் டபிள்யூ புஷ் மற்றும் பராக் ஒபாமா நிர்வாகத்தின் போது ஆப்கானிஸ்தான் போர் உத்திக்கு உதவி செய்யும் ஓய்வுபெற்ற ராணுவ லெப்டினன்ட் ஜெனரலான டக் லூட், கூறுகையில், ஆப்கானியர்கள் உறுதியாக எதிர்க்கவில்லை என்கிறார். "படைகள் மற்றும் உபகரணங்களின் எண்ணிக்கையை விட மன உறுதி, ஒழுக்கம், தலைமை, யூனிட் ஒற்றுமை ஆகியவை மிகவும் முக்கியமானவை. ஆப்கானிஸ்தானில் வெளியாட்களாக, அமெரிக்கா தேவையான பொருட்களை வழங்க முடியும், ஆனால் ஆப்கானியர்களால் மட்டுமே சண்டைக்கான தார்மீக காரணங்களை வழங்க முடியும். ஆப்கானிஸ்தானின் தாலிபான் கிளர்ச்சியாளர்கள், சிறிய எண்ணிக்கையிலானவர்கள். குறைந்த அதிநவீன ஆயுதங்கள் உள்ளவர்கள். விமானப் படையும் இல்லை. அப்படியும், நோக்கத்தை நோக்கி முன்னேறியதால் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர்." என்கிறார் அவர்.

அமெரிக்கா கைவிட்டதாக பரவிய தகவல்
அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் தாலிபான்களை பெரிதும் குறைத்து மதிப்பிட்டன. அதிபர் ஜோ பிடன் ஏப்ரல் மாதத்தில், அனைத்து அமெரிக்க வீரர்களையும் ஆப்கனிலிருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தார். அமெரிக்கப் படைகள் விரைவாக வெளியேறுவது, ஆப்கானிஸ்தான் நாட்டு படைகளை அமெரிக்கா கைவிட்டு விட்டது என்ற சமிக்ஞையை தாலிபான்களுக்கு அனுப்பிவிட்டது என்கிறார், 2001 இல் ஆப்கானிஸ்தானில் மற்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலத்தின் முடிவில் பாதுகாப்புச் செயலாளராக இருந்தா கிறிஸ் மில்லர்.

திடீரென சரிவு
கொலம்பியா பல்கலைக்கழகத்தின் சர்வதேச மற்றும் பொது விவகாரங்களின் பேராசிரியரும், ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க தளபதிகளின் முன்னாள் ஆலோசகருமான ஸ்டீபன் பிடில், கூறுகையில், ஜோ பிடனின் அறிவிப்பு ஆப்கன் அரசு படைகளின் இறுதி சரிவுக்கு காரணம் என்று கூறினார். "அமெரிக்கா படைகளை திரும்பப் பெறுவதில் உள்ள பிரச்சனை என்னவென்றால், அது நாடு முழுவதும் ஒரு சமிக்ஞையை அனுப்பிவிட்டது. திடீரென்று, நாடு முழுவதும் அமெரிக்க படைகள் விலகுவதை ஒரே கண்ணோட்டத்தில் பார்த்தனர். ஆம். ஆப்கன் அரசை அமெரிக்கா கைவிட்டதாகத்தான் இந்த உத்தரவை மக்கள் புரிந்து கொண்டனர்" என்று பிடில் கூறுகிறார். ஏப்ரல் மாதத்திற்கு முன், ஆப்கானிஸ்தான் அரசு படைகள் மெதுவாக ஆனால் சீராக சில பகுதிகளை இழந்து கொண்டிருந்தன. தங்கள் அமெரிக்க பங்காளிகள் கிளம்புகிறார்கள் என்ற தகவல் வெளியானதும், எதிர்ப்பு இல்லாமல் சரணடையத் தொடங்கிவிட்டது ஆப்கன் படை.












Click it and Unblock the Notifications