அமெரிக்காவில் இந்திய வம்சாவளி ஐஸ்கீரிம் வியாபாரி சுட்டுக் கொலை!
நியூயார்க்: அமெரிக்காவில் இந்திய வம்சாவளி ஐஸ்கிரீம் வியாபாரி ஒருவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஓக்லாண்ட் நகரில் வசித்து வந்தவர் ஜஸ்வீர்சிங். இவர் ஒரு ஐஸ்கிரீம் வியாபாரி. இந்திய வம்சாவளியான, இவர் கடந்த சனிக்கிழமை தனது வேனில் ஐஸ்கிரீம் விற்பனை செய்து கொண்டிருந்தபோது ஒருவர் துப்பாக்கியுடன் அங்கு வந்தார்.
அவர், திடீரென ஜஸ்வீர்சிங்கை நோக்கி 5 முறை துப்பாக்கியால் சுட்டார். இதில் படுகாயம் அடைந்த ஜஸ்வீர்சிங் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
துப்பாக்கியால் சுட்ட மர்ம மனிதர் உடனடியாக அங்கிருந்து தப்பியோடி விட்டார். இந்த கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை 3 நாட்களாகியும் ஓக்லாண்ட் நகர போலீசாரால் கண்டறிய முடியவில்லை.
இதைத்தொடர்ந்து ஜஸ்வீர்சிங்கை சுட்டுக்கொன்ற குற்றவாளியை கைது செய்யும் விதமாக துப்பு கொடுப்பவர்களுக்கு 10 ஆயிரம் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 6 லட்சம் வழங்கப்படும் என்று காவல்துறை அறிவித்து உள்ளது. இந்த ஆண்டில் இதுவரை ஓக்லாண்ட் நகரில் 74 பேர் காரணமே இல்லாமல் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.