திருமணம் கடந்து.. கள்ளக்காதல் செய்தால் 1 வருஷம் ஜெயில்.. வருகிறது புதிய சட்டம்.. இந்தோனேஷியாவில்!
பாலி: திருமணத்தை தாண்டி பிற நபர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டால் ஒரு ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கும் சட்டம் விரைவில் இந்தோனேசியாவில் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கு முன்பே இந்த சட்டம் கொண்டு வர முயற்சித்த போது கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் தற்போது மீண்டும் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தெற்காசிய நாடுகளில் ஒன்று இந்தோனேசியா.. தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய இந்தோனேசியாவில் சுமார் 17 ஆயிரம் தீவுக்கூட்டங்கள் உள்ளன.
இந்தோனேசியாவில் சுமார் 27 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இஸ்லாமிய பெரும்பான்மை நாடாக இந்தோனேசியா உள்ளது.
வெளிநபர்களுடன் பாலியல் உறவு கொண்டால்
இந்தோனேசியாவின் அண்டை நாடுகளான பபுவா நியூகினியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளும் உள்ளன. சிறந்த சுற்றுலாத்தளங்களை கொண்டதாகவும் சுற்றுலாப்பயணிகள் அதிகம் செல்லும் நாடுகளில் ஒன்றாக இந்தோனேசியாவும் உள்ளது. குடியரசு நாடான இந்தோனேசியாவில், திருமணத்தை தாண்டி பாலியல் உறவில் ஈடுபட்டால் அதாவது, கணவன் - மனைவி என இருவரும் தங்கள் வெளிநபர்களுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டால் சிறை தண்டனை விதிக்கும் சட்டம் விரைவில் அமலாக உள்ளது.
மீண்டும் சட்டத்தை கொண்டு வர முடிவு
இதேபோன்ற ஒரு சட்டத்தை இதற்கும் முன்பாக இந்தோனேசியா அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு கொண்டு வர திட்டமிட்டு இருந்தது. ஆனால், இதற்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து இந்தோனேசிய அரசு பின்வாங்கிய நிலையில் மீண்டும் சட்டத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளது. வரும் வாரங்களில் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக இந்தோனேசிய துணை நீதித்துறை அமைச்சர் எட்வர்டு உமர் ஷரிப் ஹைரேஜ் கூறியதாவது:-
ஷரியா சட்டம்
"இந்தோனேசிய கொள்கைகளுக்கு ஏற்ப திருமணத்தை தாண்டிய பாலியல் உறவை கிரிமினல் குற்றமாக்கும் சட்டத்தை கொண்டு வருவதால் பெருமை அடைகிறோம்" என்று தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்கள் பெரும்பான்மை நாடாக இருக்கும் இந்தோனாசியாவில் ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் ஒவ்வொரு சட்டங்களும் விதிகளும் பின்பற்றப்படுகின்றன. இந்தோனேசியாவின் வடக்கு மாகாணத்தில் உள்ள Aceh- பகுதியில் ஷரியா சட்டம் அமலில் உள்ளது.
ஒரு ஆண்டு வரை சிறை தண்டனை
இந்தோனேசியாவின் முக்கிய சுற்றுலாத்தளமாக இருக்கும் பாலியில் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். பாலியில் சற்று சுதந்திரமான சட்டங்கள் உள்ளன. ஆனால் தற்போது அமல் ஆக இருக்கும் சட்டம் நாடு முழுவதும் அமலாக உள்ளது. இந்தோனாசியாவிற்கு சுற்றுலா வருபவர்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும். டிசம்பர் மாத மத்தியில் இந்த சட்டத்திற்கு இந்தோனேசியா அதிபர் கையெழுத்திடுவார் என்று கூறப்படுகிறது. இந்த சட்டம் அமலுக்கு வந்த பிறகு திருமணத்தை தாண்டிய உறவில் ஈடுபட்டால் அதிகபட்சமாக ஒரு ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும். இந்த சட்டத்தின் கீழ், கணவன் அல்லது மனைவிக்கு புகார் அளிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்தாலும் பெற்றோர்கள் இந்த சட்டத்தின் கீழ் புகாரளிக்க முடியும். திருமணத்திற்கு முன்பாக ஒன்றாக வாழ்ந்தால் ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்படும்
கடும் எதிர்ப்புகள்
இந்த சட்டங்களால் இந்தோனேசியா சுற்றுலாத்துறையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் அந்த நாட்டில் சில எதிர்ப்புகள் எழுந்தன. அதேபோல், தொழில்துறையிலும் பெரும் தாக்கம் ஏற்படும் என்றும் முதலீட்டாளர்கள் இந்தோனேசியாவில் முதலீடு செய்வதை மறு பரிசீலனை செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அங்குள்ள சில தொழில் அமைப்புகள் விமர்சித்து இருக்கின்றன.