அமெரிக்கா: முறையற்ற சிகிச்சை... அபராதமாக ரூ2.5 கோடி தர இந்திய டாக்டர் சம்மதம்
நியூயார்க்: அமெரிக்காவில், மருத்துவமனை நிர்வாகி மூலம் நோயாளிகளுக்கு நரம்பு ஊசி போட்ட இந்திய மருத்துவர் ஒருவர் தனது குற்றத்திற்காக இரண்டரை கோடி ரூபாய் அபராதம் செலுத்த சம்மதம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கடந்த 2009-2010-ம் ஆண்டுகளில் உடல் பருமனை குறைப்பதற்கான சிறப்பு கிளினிக் நடத்தி வந்தவர் இந்திய மருத்துவர் ரவி சர்மா. தான் மருத்துவமனையில் இல்லாத சமயங்களில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு தனது மருத்துவமனை நிர்வாகியை ஊசி போட வைத்துள்ளார் ரவி சர்மா. ஆனால், மருத்துவரே ஊசி போட்டதாக போலி பில் வழங்கப் பட்டு வந்துள்ளது.
அதேபோன்று, மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த பலரை தேவையேயின்றி, ஸ்கேன் செய்ய வைத்துள்ளார். மேலும், இது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் ரவி சர்மா மீது சுமத்தப்பட்டது. இதுதொடர்பாக அவரிடம் வேலை பார்த்த ஆஸ்பத்திரி நிர்வாகி டவெல், சுகாதாரத்துறையில் புகார் செய்தார். அதனைத் தொடர்ந்து ரவி சர்மாவிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையின் முடிவில், அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து வழக்குகளில் இருந்து விடுபடுவதற்கு 4 லட்சம் டாலர்கள் தரவும், சுமார் 3 ஆண்டு காலம் சிறப்பு பயிற்சி பெறவும் ரவி சர்மாவுக்கு அறிவுறுத்தப் பட்டது. இதற்கு ரவி சர்மா சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நீதித்துறை உதவி வக்கீல் ஒருவர் கூறுகையில், "நரம்பு ஊசிகள் போன்றவற்றை தகுதிவாய்ந்த நபர்கள் மட்டுமே செலுத்த வேண்டும். ஆனால் தகுதியற்றவர்களை கொண்டு இப்படிப்பட்ட காரியங்களை அரங்கேற்றி, மக்களின் உயிரோடு விளையாடுவதை பொறுத்துக்கொள்ள மாட்டோம்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications