குவைத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழரை காப்பாற்றிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!
குவைத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழரை இந்திய யூனியன் முஸ்லித் லீக் கட்சி காப்பாற்றியுள்ளது.
குவைத்: மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழரை இந்திய யூனியன் முஸ்லித் லீக் கட்சி காப்பாற்றியுள்ளது. கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்திற்கு 35 லட்சம் ரூபாய் நிதி வழங்கி சமரச தீர்வும் கண்டுள்ளது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி.
அர்ஜூனன் ஆதி முத்துவும், கேரள மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அப்துல் வாஜித் என்ற தொழிலாளியும் குவைத்தில் உள்ள ஒரு கம் பெனியில் பணிபுரிந்து வந்தனர். இருவருக்கும் ஏற்பட்ட சண்டையால் கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அப்துல் வாஜிதை அர்ஜூனன் ஆதி முத்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இதன் காரணமாக கடந்த ஆண்டில் குவைத் உச்சநீதிமன்றம் ஆதி முத்துவுக்கு மரண தண்டனை விதித்தது. குவைத் சட்டப்படி கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்துடன் கொலை செய்தவர் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு அவரை பாதிக்கப்பட்டவர் மன்னித்தால் மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்படுவர்.
ரூ.30 லட்சம் இழப்பீடு கோரினர்
இதன் அடிப்படையில் அப்துல் வாஜித் குடும்பத் தினருடன் அர்ஜூனன் குடும்பத்தினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். வாஜித் குடும்பத்தினர் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளதால் ரூ. 30 லட்சம் இழப்பீடு கோரினர்.
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கிடம் உதவி
அர்ஜூனன் குடும்பத்தினரும் ஏழ்மை நிலையில் உள்ளதால் அவர்களால் இந்த தொகையை கொடுக்க முடியவில்லை. தங்களது குடும்பத்தை காப்பாற்ற ஒரேயொரு 15 வயது மகள் மட்டும் உள்ளதாகவும் கணவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் குடும்பத்தின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் எனவும், இந்த விஷயத்தில் தங்களுக்கு உதவும் படியும் சென்னையில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையகத்திற்கு 13-07-2017 அன்று வந்து அர்ஜூனன் ஆதி முத்துவின் மனைவி மாலதி நேரில் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீனை சந்தித்தார்.
முன்னாள் அமைச்சரிடம் வலியுறுத்தல்
அவரது கோரிக்கையை கனிவுடன் ஏற்ற பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான, கேரள மாநில முன்னாள் அமைச்சர் பி.கே.குஞ்ஞாலி குட்டிக்கு தகவல் தெரிவித்ததோடு மாலதி குடும்பத்தினரின் கோரிக்கையை பரிசீலிக்கும்படி பி.கே. குஞ்ஞாலி குட்டியை வலியுறுத்தினார்.
2 குடும்பங்கள் காப்பாற்றப்பட்டது
இத்தகவல் கேரள மாநில முஸ்லிம் யூத் லீக் தலைவர் செய்யது முனைவர் அலி ஷிஹாப் தங்ஙளுக்கு அனுப்பப்பட்டது. அவர் அர்ஜூனன் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மூலம் ரூ. 35 லட்சம் திரட்டி இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டுள்ளார். இந்த நடவடிக்கையால் உண்மையில் இரண்டு குடும்பத்தினரை காப்பாற்றி உள்ளோம் என முனைவர் அலி ஷிஹாப் தங்ஙள் தெரிவித்தார்.