பிரம்மிக்க வைத்த கத்தார்.. பிபா உலகக்கோப்பையில் ஜொலிக்கும் இந்தியர்கள் உழைப்பு! வெயிலில் பட்ட பாடு
தோஹா: பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் போட்டிக்காக கத்தார் செய்து இருக்கும் பிரமாண்ட ஏற்பாடுகளின் பின்னணியில் பல்லாயிரக்கணக்கான இந்திய தொழிலாளர்களின் பல ஆண்டுகால உழைப்பு அடங்கி இருக்கிறது.
உலகின் விளையாட்டு திருவிழாவாக ஒலிம்பிக் தொடர் மற்றும் பிபா கால்பந்து உலகக்கோப்பை தொடர் விளையாட்டு ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.
தற்போது 2022 பிபா உலகக்கோப்பை தொடர் அரபிய நாடான கத்தாரில் வரும் நவம்பர் 20 ஆம் தேதியான நேற்று தொடங்கி நடைபெற இருக்கிறது.

பிபா உலகக்கோப்பை
இந்த தொடர் டிசம்பர் 18 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக சர்வதேச அணிகள் கத்தாரில் குவிந்து இருக்கின்றன. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் அங்கு நடந்து முடிந்து உள்ளது. நேற்று தொடங்கிய உலகக்கோப்பை தொடரில் முதல் போட்டியில் கத்தார் - ஈகுவடார் ஆகிய அணிகள் விளையாடின.

முதல் போட்டி
இதற்காக உருவாக்கப்பட்ட 60 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் பிரம்மாண்டமான அல் பேத் மைதானத்தில் இந்த போட்டி நடத்தப்பட உள்ளது. இதில் 2 - 0 என்ற கோல் கணக்கில் ஈகுவடார் அணி வெற்றிபெற்றது. உலகக்கோப்பை வரலாற்றின் முதல் போட்டியில் தொடரை நடத்தும் நாடு தோல்வியடைந்தது இதுவே முதல்முறை.

கத்தார்
1963 ஆம் ஆண்டு பிபாவின் அங்கீகாரத்தை பெற்ற வளைகுடாவின் சிறிய நாடான கத்தார், ஒருமுறைக்கூட உலகக்கோப்பை கால்பந்து தொடரில் விளையாட தகுதி பெற்றது இல்லை. ஆனால், இந்த ஆண்டு தொடரை நடத்துவதால் கத்தார் அணி முதல்முறையாக உலகக்கோப்பையில் விளையாடியது.

பெரிய அணிகள்
இந்த தொடரில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ், ஜெர்மனி, போர்சுகல், பிரேசில், அர்ஜெண்டினா, பிரிட்டன், சிலி, க்ரீஸ், இத்தாலி உள்ளிட்ட பல முன்னணி அணிகளும் விளையாட உள்ளன. 8 பிரிவுகளாக நடத்தப்படும் லீக் சுற்று போட்டிகளில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் குரூப் டி பிரிவிலும், ஜெர்மனி குரூப் டி பிரிவிலும், பிரேசில் குரூப் ஜி பிரிவிலும், போர்ச்சுகல் குரூப் எச்- இல் இடம்பெற்று இருக்கின்றன.

உள் கட்டமைப்பு
உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கு பெரிய கட்டமைப்புகளே இல்லாத நிலையில் கடந்த 12 ஆண்டுகளாக அதற்கான திட்டங்களை வகுத்து உள்கட்டமைப்பு பணிகளை கத்தார் மேற்கொண்டு இருக்கிறது. 8 கால்பந்து மைதானங்கள், நெடுஞ்சாலைகள், நட்சத்திர விடுதிகள், விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில் சேவை, சுரங்க பாதைகள் என உள்கட்டமைப்புகளை அமைத்து நாட்டையே மாற்றி இருக்கிறது கத்தார் அரசு.

220 பில்லியன் டாலர்
இதற்காக 220 பில்லியன் டாலர்களை அந்நாட்டு அரசு செலவிட்டு இருக்கிறது. கத்தாரின் இந்த பெரும் மாற்றத்தை பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர். கால்பந்து வரலாற்றிலேயே அதிக செலவில் நடத்தப்படும் கால்பந்து உலகக்கோப்பை தொடர் இது என்ற பெருமையை கத்தார் உலகக்கோப்பை பெற்று உள்ளது.

இந்தியர்களின் உழைப்பு
கால்பந்து உலகக்கோப்பைக்காக கத்தார் செய்துள்ள ஏற்பாடுகள் உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. இதில் கத்தார் அரசின் பொருட்செலவு பெரும்பங்காற்றினாலும், அதன் பின்னணியில் உள்ள இந்தியர்களின் உழைப்பை மறந்துவிட முடியாது. 12 ஆண்டுகளுக்கு முன்பே இதற்காக இந்தியர்களை வேலைக்கு எடுத்தது கத்தார் அரசு.

ஜொலிக்கும் உழைப்பு
இந்தியாவை சேர்ந்த பொறியாளர்கள், கட்டட வடிவமைப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், கூலித் தொழிலாளர்கள் என பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் இதற்காக பணியமர்த்தப்பட்டு உள்ளனர். அவர்களின் திட்டமும் கடின உழைப்பும் தற்போது கண்கொள்ளா காட்சியாக கத்தாரில் ஜொலித்துக் கொண்டு இருக்கிறது.

கடும் வெப்பம்
இதுகுறித்து கத்தாரில் மைதான கட்டமைப்பு பணியில் பணியாற்றிய மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த பொறியாளர் ஷாஹித் அலி இது மிகவும் சவாலான காரியம் என்று தெரிவித்து உள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "கத்தார் மைதானத்தில் உலகக்கோப்பை தொடக்க விழாவை காண்பதில் மகிழ்கிறேன். இது பெருமையாக இருக்கிறது. கத்தாரில் கடுமையான வெப்பத்தில் நாங்கள் பணியாற்றினோம்.

35 நாடுகள்
கடந்த 2017 ஆம் ஆண்டு கத்தாரில் இந்த மைதான கட்டுமான பணிக்காக நான் சென்றேன். சீனா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 35 நாடுகளை சேர்ந்தவர்கள் என்னோடு பணியாற்றினார்கள். இந்தியர்கள் கூலித் தொழிலாளர்கள் தொடங்கி இயக்குநர் போன்ற உயர் பொறுப்புகளில் அமர்ந்து இருக்கிறார்கள்." என்று தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications