தடையை மீறி பேஸ்புக்கில் ‘கழுகு’ விற்ற இந்தோனேஷியாக்காரர் கைது
ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் பாதுகாக்கப்பட்ட இனமாக அறிவிக்கப்பட்ட கழுகுகளை பேஸ்புக் மூலம் விற்பனை செய்த நபரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தோனேஷியாவில் கழுகுகள் பாதுகாக்கப்பட்ட இனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அவற்றை வேட்டையாடுவதோ அல்லது விற்பனை செய்வதோ சட்டப்படி குற்றம் ஆகும்.
இந்நிலையில் அந்நாட்டின் சுரபயா நகரில், சட்டவிரோதமாக ஒருவர் பேஸ்புக் மூலம் கழுகுகளை விற்று வருவதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து வாடிக்கையாளர் போல் நடித்து அந்நபரின் வீட்டிற்கு போலீசார் சென்றனர். அப்போது அங்கு கழுகுகள் விற்கப்படுவது உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்நபரைப் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து வெள்ளை நிற கடல் கழுகு உள்ளிட்ட பல்வேறு இனங்களைச் சார்ந்த 14 கழுகுகள் மீட்கப்பட்டது.
மேலும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் கழுகு முட்டைகளை பேஸ்புக் மூலம் 56 டாலருக்கும், வளர்ந்த கழுகுகளை 3 மில்லியன் டாலருக்கும் விற்பனை செய்து வந்ததது தெரியவந்துள்ளது.
இந்தோனேஷியச் சட்டப்படி பாதுகாக்கப்பட்ட இனங்களில் ஒன்றான கழுகுகளை அவர் வேட்டையாடி உள்ளதால் அவருக்கு கடுமையான தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டு போலீஸார் தெரிவித்துள்ளனர்.