இந்தோனேஷிய பெண் போலீசாருக்கு நடக்கும் '2 விரல்' கன்னித் தன்மை சோதனையால் சர்ச்சை
ஜகார்த்தா: இந்தோனேஷியா நாட்டில் போலீஸ் பணிக்கு பெண்களை தேர்ந்தெடுக்கும் முன்பு அவர்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்படுவதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
உலகில் அதிகம் இஸ்லாமியர்கள் வாழும் நாடு இந்தோனேஷியா. இங்கு போலீஸ் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படும் பெண்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகம் உள்ளன. குறிப்பாக, போலீஸ் தேர்வுக்கு முன்பாக பெண்களுக்கு கன்னித்தன்மை சோதனை நடத்தப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மனித உரிமை அமைப்பு ஒன்று, இந்தோனேஷியாவின் ஆறு நகரங்களில் பெண் போலீசாரிடம் நடத்திய ஆய்வில் அதிகாரப்பூர்வமாக இத்தகவல் வெளியே வந்துள்ளது. இதுகுறித்து அந்த பெண் போலீசார் கூறுகையில், இரு விரல்கள் மூலமாக கன்னித்தன்மை சோதனை நடத்தப்பட்டது. இதனால் எங்களுக்கு வலியும், அவமானமும் ஏற்பட்டது என்று புகார் கூறியுள்ளநர்.
2008ல் கன்னித்தன்மை சோதனைக்கு ஆட்பட்ட ஒரு பெண் கூறுகையில், கன்னித்தன்மை சோதனை நடைபெற்ற அறைக்குள் நுழைந்தபோதே இனம் தெரியாத அறுவெறுப்பு ஏற்பட்டது. ஒருமுறை சோதனை நடத்தப்பட்டதும் நான் கன்னித்தன்மையை இழந்து விட்டதை போல உணர்ந்தேன். அது ஒரு வலிமிகுந்த அனுபவம், என்னை மிகவும் பாதித்தது என்றார்.
இதுகுறித்து இந்தோனேஷிய போலீஸ் துறை செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், பால்வினை நோய்கள் எதுவும் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ளவே இச்சோதனை நடத்தப்படுகிறது. மருத்துவ விதிமுறைகளின் படியே இச்சோதனை நடத்தப்படுவதால் எந்த விண்ணப்பதாரரும் காயமடைய வாய்ப்பில்லை என்றார்.
மனித உரிமைகள் பார்வை என்ற அமைப்பின் இயக்குநர் நிஷா வாரியா கூறுகையில், கன்னித்தன்மை சோதனை என்பது பெண்ணின் மாண்புக்கு எதிரானது. உடனடியாக அனைத்து போலீஸ் ஆளெடுப்பு மையங்களிலும் இந்த நடைமுறையை ஒதுக்கித் தள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.