ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் பாக்தாதி கொல்லப்பட்டாரா?
பாக்தாத்: ஈராக்கில் அந்நாட்டு ராணுவம் மற்றும் அமெரிக்க கூட்டுப்படை நடத்திய தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் பாக்தாதி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்நிலையில் ஈராக் மற்றும் அமெரிக்க கூட்டுப்படையினர் ஐ.எஸ். தீவிரவாதிகள் இருக்கும் இடங்களில் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
வெள்ளிக்கிழமை இரவு மொசுல் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி காயம் அடைந்ததாகவும், துணை தலைவர் முசல்லம் அல் துர்க்மணி இறந்துவிட்டதாகவும் ஈராக் பாதுகாப்பு துறை அமைச்சர் காலித் அல் ஒபைதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஆனால் சனிக்கிழமை அல் கைம் நகரில் நடந்த தாக்குதலில் தான் பாக்தாதி படுகாயம் அடைந்ததாகவும், மொசுல் நகரில் அல்ல என்றும் ஈராக் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உளவுத் துறை அளித்த தகவலின்பேரில் அல் கைம் நகரில் ஈராக் படையினர் பாக்தாதியை குறி வைத்து தாக்குதல் நடத்தினர் என்று அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஆனால் தாக்குதல் நடந்த சமயத்தில் அங்கு பாக்தாதி இருந்தாரா என்பது அமெரிக்காவுக்கு உறுதியாகத் தெரியவில்லை.
இதற்கிடையே அமெரிக்க கூட்டுப்படையினர் மொசுல் அருகே ஐ.எஸ். தீவிரவாத தலைவர்களின் கூட்டத்தை குறி வைத்து தாக்குதல் நடத்தினர் என்று பென்டகன் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பாக்தாதி இறந்துவிட்டதாகவும், அவரது உடலை அவரது ஆதரவாளர்கள் அடக்கம் செய்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.