எங்களை தாக்கும் வரை உங்களை நிம்மதியாக வாழவிட மாட்டோம்: பிரான்ஸை மிரட்டும் ஐஎஸ்
பாரீஸ்: சிரியாவில் எங்களின் அமைப்பினர் மீது குண்டு வீசித் தாக்குவதை நிறுத்தாவிட்டால் உங்கள் நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ முடியாது என்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பிரான்ஸுக்கு மிரட்டல் விடுத்துள்ளது.
பாரீஸில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 129 பேர் பலியாகினர், 352 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. சிரியாவில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது குண்டுகள் வீசி அழித்து வருகிறது. இந்த கூட்டுப்படையில் அண்மையில் பிரான்ஸ் சேர்ந்தது.
இந்நிலையில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது,
சிரியாவில் எங்கள் ஆட்கள் மீது குண்டுகள் வீசி தாக்குதல் நடக்கும் வரையில் பிரான்ஸில் இது போன்ற தாக்குதல்கள் தொடரத் தான் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் மீடியா பிரிவான அல் ஹயாத் மீடியா மையம் கூறியிருப்பதாவது,
நீங்கள் எங்கள் மீது குண்டுகள் வீசும் வரை நீங்கள் நிம்மதியாக வாழ முடியாது. மார்க்கெட்டுக்கு சென்று வரக்கூட நீங்கள் அஞ்சி நடுங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடியோவில் உள்ள தீவிரவாதிகள் பிரான்ஸை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அதில் ஒருவர் அபு மரியம் என்பது அடையாளம் தெரிந்துள்ளது.